

இதோ... அதோ... என பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த கோடை வெயில் விண்ணைத் தாண்டி மண்ணுக்கு இறங்கி வந்தே விட்டது. ஏப்ரல், மே இரண்டு மாதமும் உச்ச பட்ச கோடை காலம் என்று கூறப்பட்டாலும் அதன் தாக்கம் ஜூன், ஜூலை வரை கூட நீடிப்பதற்கான வாய்ப்புண்டு. இக்காலங்களில் சூட்டைத் தாங்க முடியாமல் உடல் தகிக்கும். நாவறட்சி உண்டாகும். முக்கியமான வேலைகளுக்காகக் கூட வெளியே சென்று வருவது வெகு சிரமமாக இருக்கும். இந்த நேரங்களில், ஆபத்பாந்தவனாய் நம் ஆரோக்கியம் காக்க முன் வரும் உணவு, நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான தயிர் என்று கூறலாம். சுலபமாக, வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இந்த உணவை எவ்வாரெல்லாம் பயன்படுத்தி, பலனடையலாம் என்பதை இப்பதிவில் காணலாம்.
1. நம்க்கீன் லஸ்ஸி (Namkeen Lassi): கெட்டித் தயிரை மிக்ஸியில் அடித்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து அருந்தலாம். வயிற்றுக்கு இதமும், உடலுக்கு புத்துணர்ச்சியும் அளிக்கும். இலகுவான சிம்பிள் ட்ரிங்க். சாப்பாட்டுக்குப் பின் அருந்துவது ஆரோக்கியம்.
2. லவுக்கி (Bottle gourd) ரைத்தா: சுரைக்காயை தோல் சீவி, மெல்லிய இழைகளாய் துருவி, அதனுடன் கெட்டித் தயிர் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து, சைடு டிஷ்ஷாக உட் கொள்ளலாம். உடலுக்கு நீரேற்றமும், திருப்தியும் தரும். வயற்றுக்குள் அழுத்தம் தராத, எளிதில் ஜீரணிக்கக் கூடிய ஓர் உணவு.
3. தயிர் கலந்த புதினா டிப்: புதினா இலைகளுடன், உரித்த பூண்டுப் பற்கள் மற்றும் உப்பு சேர்த்து மசிய அரைத்து, அதனுடன் கெட்டித் தயிர் சேர்த்தால், மாலை நேர ஸ்னாக்ஸ், சிப்ஸ் மற்றும் பிஸ்கட்களுக்கு அது சுவையானதொரு டிப் (Dip) பாகப் பயன்படும்.
4. பூந்தி ரைத்தா (Boondi Raita): கெட்டித் தயிருடன் உப்பு மற்றும் ஜீரகப் பொடி சேர்த்துக் கலந்து, மேற்பரப்பில் பூந்தி மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி, அதை உணவுக்கு சைடு டிஷ்ஷாக உபயோகிக்கலாம்.
5. மசாலா ச்சாஸ் (Masala Chaas): தயிருடன் நீர் சேர்த்து கெட்டி மோராக கடைந்து, அதனுடன் உப்பு மற்றும் சிவக்க வறுத்த சீரகம் சேர்த்துக் குடிப்பது, சிறியவர் பெரியவர் என்ற வித்யாசமின்றி, இந்தியாவின் அனைத்து மாநில மக்களுக்கும் பிடித்தமான ஒரு பானம். மேலே கொஞ்சம் கொத்தமல்லி இலைகள் தூவியும் குடிக்கலாம். மசாலா ச்சாஸ் உடலுக்கு உடனடி உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியதொரு அற்புத பானம்.
6. தாளித்த தயிர் சாதம் (Curd Rice): புதிதாக, குழைவாக சமைத்த சாதத்தை, சிறிது ஆற வைத்து அதனுடன் புளிக்காத கெட்டித் தயிர் சேர்த்து வெண்ணெய் போல் பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதில், சிறிது பெருங்காயத் தூள், தேவையான உப்பு சேர்த்து, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட வேண்டும். வெயில் நேரம் தயிர் சாதம் உண்பது வயிற்றுக்கு குளிர்ச்சியும் நிறைவான உணர்வும் தரும்.
வெயில் காலத்தில் உடலுக்கு நீரேற்றம் தர பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. இருந்த போதும், தயிர் உடலுக்கு குளிர்ச்சி தருவதாலும், அதில் குடல் ஆரோக்கியம் காத்து, ஜீரணத்தை சுலபமாக்க உதவும் ப்ரோபயோடிக்ஸ் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற பலவகை ஊட்டச் சத்துக்கள் நிறைந்திருப்பதாலும், தயிரை நம் தினசரி உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.