நமது உடலுக்கு கவசமான ஒரு அமைப்பைத் தந்து பாதுகாப்பது சருமம். அதில் ஏதாவது தேமல், சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களோ அல்லது பூஞ்சை தொற்றோ ஏற்பட்டால் அது உடல் அழகை பாதிக்கும். இதுபோன்ற சருமப் பிரச்னைகளுக்கு எளிதாக வீட்டிலேயே சிகிச்சை அளித்து குணம் தரும் 7 விதமான பொருட்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. வெள்ளைப் பூண்டு: பூஞ்சைகளை எதிர்ப்பதில் பூண்டு முதல் இடத்தை வகிக்கிறது. நான்கு ஐந்து பூண்டுகளை தோலுரித்து நன்றாக நசுக்கி சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து அதை பேஸ்ட் போல மாற்றி அதை உடலில் தேமல் அல்லது பூஞ்சை தொற்று ஏற்பட்ட பகுதிகளில் தடவினால் விரைவில் குணமாகும்.
2. தயிர்: தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் சருமத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் ஆரோக்கியமான தன்மையை ஊக்குவிக்கின்றன. பூஞ்சைத் தொற்று ஏற்பட்ட இடத்தில் தயிரை தடவி வந்தாலே நான்காவது நாளில் சருமம் தொற்றிலிருந்து மீண்டு வரும்.
3. ஆப்பிள் சிடார் வினிகர்: இது சருமத்தின் பிஹெச்-சமநிலையை கட்டுப்படுத்தப் பயன்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. சிறிதளவு வினிகரை தண்ணீரில் கரைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
4. தேயிலை மர எண்ணெய்: சில சொட்டுக்கள் தேயிலை மர எண்ணெயை எடுத்து தொற்று ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் நீங்கிவிடும். எரிச்சலைக் குறைத்து பூஞ்சை வளர்ச்சியை எதிர்த்துப் போராட இது உதவுகிறது.
5. மஞ்சள்: இதில் உள்ள குர்குமின் என்கிற பொருள் இயற்கையான பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அரை ஸ்பூன் மஞ்சளுடன் சில துளிகள் நீரை கலந்து பேஸ்ட் போல உருவாக்கி தொற்று உள்ள இடத்தில் தடவவும். நான்கு நாட்களில் தொற்று மறைந்து விடும்.
6. பேக்கிங் சோடா: சருமத்தின் மென்மை தன்மையை பாதுகாக்கவும், பிஹெச் சமநிலையை உண்டாக்கவும் பேக்கிங் சோடா பயன்படுகிறது. அரை ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிதளவு நீரில் பேஸ்ட் போல செய்து தொற்று உள்ள இடத்தில் தடவவும். இது இறந்த சரும செல்களை அகற்றி பூஞ்சைகளை அழித்துவிடும்.
7. கற்றாழைச் சாறு: இது பூஞ்சை தொற்றுகளால் ஏற்படும் அரிப்பு மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. கற்றாழை ஜெல்லை கூழ் போல் ஆக்கி அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.