வெட்டுகாய பூண்டு செடி...
வெட்டுகாய பூண்டு செடி...

நல்ல விவரமான மூலிகைதான் - ‘வெட்டுகாய பூண்டு’!

ழைக்காலத்தில் அனைத்து சமவெளிப் பகுதிகளிலும் கிடைக்கும் ஒரு அற்புத மூலிகைதான் ‘வெட்டுகாய பூண்டு’. இது நீர் ஓட்டம் உள்ள செம்மண் நிலத்தில் தானாகவே வளரும்.

இதற்கு ஏராளமான பெயர்கள் உண்டு. அவற்றில் சில அரிவாள்மனை பூண்டு, இராவணன் தலை, கிணற்று பாசான், செருப்படித் தழை, காய பச்சிலை, சேரல் கொடி, மூக்குத்தி பூ ஆகியவை. குழந்தைகள் விளையாட்டாகச் சொல்லும் பெயர் ‘தாத்தா தலை வெட்டி’.

காயங்களுக்குப் பயன்படுத்தும் பச்சிலை என்பதால் இது காய பச்சிலை எனப்படும். இந்தச் செடியில் இருக்கும் காய்க்கு விஷத்தன்மை உண்டு என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். இந்தக் காயை கட்டாயம் சாப்பிடக்கூடாது. இதன் பூ, மஞ்சள், வெள்ளை, ஊதா என்று மூன்று வண்ணங்களில் இருக்கும்.

சளிக்கு நல்ல மருந்து

காய பச்சிலை செடியின் இலைகளை பறித்து நன்றாக கழுவி மிளகு ரசத்தில் போட்டு ஒரு கொதிவிட்டு அந்த ரசத்தைக் குடித்தால் உடம்பில் இருக்கும் சீத்தளத்தை வெளியேற்றிவிடும். அதாவது சளி பிரச்னை, தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணமாக இந்த ரசம் இருக்கும்.

வெட்டுக்காயத்திற்கு ஏற்றது

கீழே விழுந்ததால் நம்முடைய உடலில் ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ, அல்லது ஏதாவது வெட்டுக்காயம் பட்டு ரத்தம் இடைவிடாமல் வந்துகொண்டே இருக்கும்போதோ இந்தக் காய பச்சிலைச் செடியின் இலைகளை பறித்து உள்ளங்கையில் வைத்துக் கசக்கினால் வரும் சாறை காயத்தின் மீது போட்டால் ரத்தம் உடனடியாக நிற்கும். நீண்ட நாட்களாக உடலில் ஆறாத புண் ஏதும் இருந்தால் அதன்மீது இந்த மூக்குத்தி பூ இலையைச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து அந்த விழுதைப் பூசிவந்தால் புண் விரைவில் ஆறிவிடும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயம் விரைவில் ஆறாது. அந்தக் காயத்தைக்கூட ஆற்றிவிடும் மருத்துவக் குணம் கொண்டது இந்த மூலிகை. இதன் இலைகள் தேமல், சொறி இவற்றைக் குணப்படுத்தும்.

முட்டி வலி நீங்கும்

இந்தச் செடியில் இருக்கும் பூ வேர், இலை, இவற்றை எல்லாம் ஒன்றாகச் சேகரித்து ஒரு கடாயில் போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாக வதக்கிக்கொள்ளவும். வதங்கிய அந்த விழுதை எடுத்து வலிக்கின்ற முட்டியின்மீது வைத்து வெள்ளை துணி போட்டு கட்டிவிட்டால் வலி நீங்கும்.

இதையும் படியுங்கள்:
செய்வோம்; சாப்பிடுவோம்... சத்துகளையும் தெரிந்து கொள்வோம்!
வெட்டுகாய பூண்டு செடி...

பல், மற்றும் ஈறுகளுக்கு மருந்து

இந்தப் பூவை 5, 6 பறித்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பல் வலி, சொத்தை பல் பூச்சிகள் வெளியேறிவிடும். ஈறுகளில் இருந்து ரத்தம் வருவதைக் கட்டுப்படுத்த 20 பூக்களைப் பறித்து 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க காய்த்து 1 கப் தண்ணீராக வற்றியபிறகு சிறிது ஆறியதும் இந்தத் தண்ணீரால் வாய் கொப்பளித்தால் ஈறுகளில் இருந்து ரத்தம் வருவது தடைபடும்.

பைல்ஸ் பிரச்னை தீரும்.

பைல்ஸ் பிரச்னை உள்ளவர்கள் இந்த இலைகளை ஒரு கை பறித்து ஈரப்பதம் போகும் வரை நன்றாக உலர்த்தி பின்பு அத்துடன் 10 மிளகையும் சேர்த்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்து சிறு உருண்டையாக உருட்டி காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பின் ஒரு கப் மோரில் கற்கண்டு பொடியைக் கலந்து குடித்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

விவசாயிகள் மற்றும் கல் உடைப்பவர்கள் இன்றும் இதை  அருமருந்தாக பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com