‘இந்தியன் பிளாக் பெரி’ எனப்படும் ஜாமுன் பழம், அதில் அடங்கியுள்ள தனித்துவமான பைட்டோகெமிக்கல் மற்றும் பல ஊட்டச் சத்துகளின் காரணமாக மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இப்பழம் தரும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
ஜாமுன் பழத்தில் ஜம்போலின் எனப்படும் க்ளைகோசைட் உள்ளது. இது மாவுச்சத்து சர்க்கரையாக மாற்றப்படுவதைத் தடுத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகிறது. இதிலுள்ள அதிகளவு டயட்டரி நார்ச்சத்து செரிமானம் சிறப்பாக நடைபெறவும், மலச்சிக்கல் நீங்கவும் உதவுகிறது.
ஜாமுன் பழத்திலுள்ள வைட்டமின் C இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலுவடைய உதவுகிறது. இதனால் உடலில் ஏற்படும் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி, நோய் வராமல் தடுப்பது சுலபமாகிறது.
இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும், அதிகமாக இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவி புரிகிறது. இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சு மூலம் உண்டாகும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி சரும செல்களை பாதுகாக்கின்றன.
சருமத்தில் பருக்கள் வருவதையும் சரும வறட்சி அடையவதையும் தடுக்கின்றன. டேன்னின் (Tannin) மற்றும் பிளவனாய்ட்கள் குடலில் வீக்கங்களைக் குறைத்து ஆரோக்கியமான செரிமானத்துக்கும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. இதனால் உடலின் மொத்த ஆரோக்கியம் மேம்படுகிறது.
அந்தோசியானின் தீங்கு தரும் ஃபிரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கிறது. இதனால் நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது.
இதன் ஹெபடோ ப்ரொட்டெக்டிவ் குணமானது கல்லீரல் சிதைவைத் தடுத்து அதன் செயல்பாடுகள் மேம்பட உதவுகிறது. மேலும், இதன் டையூரிக் குணமானது உடல் நச்சுக்களை வெளியேறச் செய்து, கல்லீரலையும் கிட்னியையும் சுத்தமடையச் செய்கிறது. இதன் ஆன்டி பாக்டீரியல் குணம் வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், ஈறுகளை நோயின்றி பாதுகாக்கவும் உதவுகிறது.
தமிழில் நாவல் பழம் என அழைக்கப்படும் இப்பழத்தை அனைவரும் விரும்பி உண்போம்; ஆரோக்கியம் பெறுவோம்.