நம்முடைய பாரம்பரியமான உணவுகளில் பூண்டு பாலும் ஒன்றாகும். பூண்டில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளன. Allicin, Alliin, Diallyl disulfide, S-allyl cysteine ஆகியவை உள்ளன. இது மட்டுமில்லாமல், வைட்டமின் சி, வைட்டமின் B1, வைட்டமின் B6, கால்சியம், மெக்னீசியம், செலினியம், இரும்புச்சத்து, காப்பர் போன்ற தாதுச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இத்தனை சத்துக்கள் நிறைந்த பூண்டினை பாலில் இட்டு கொதிக்க வைத்து குடிக்கும்போது அதனுடைய சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. மாரடைப்பை தடுக்கும்: மாரடைப்பு வராமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு என நிறைய ஆய்வில் சொல்லப்படுகிறது. பூண்டில் உள்ள Allicin என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இரத்த கொதிப்பு, உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற காரணத்தினால் இரத்தக்குழாயில் ஏற்படும் Inflammationஐ தடுத்து இரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்யும். இதனால் மாரடைப்பு வரும் அபாயத்தை குறைக்கும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. பூண்டை பாலுடன் சேர்த்து சாப்பிடும்போது பாலில் உள்ள கால்சியம், மெக்னீசியம் இதயத்தின் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவி செய்கிறது.
2. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்: தாய்ப்பால் சுரக்காமல் அவதிப்படுபவர்களுக்கு பூண்டு பால் மிகவும் நல்லதாகும். பூண்டில் இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக்கூடிய Galactagogue என்னும் சத்து அதிகளவில் உள்ளது. இது தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்களை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும், பூண்டு பாலில் தாய்மார்களுக்கு தேவையான கால்சியம், புரதம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதிலுள்ள Anti bacterial மற்றும் Anti fungal பண்புகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு வரக்கூடிய Mastitis போன்ற நோய்தொற்று வராமல் காக்கிறது.
3. மூட்டுவலியை குணமாக்கும்: மூட்டு எலும்பில் உண்டாகக்கூடிய அழற்சியின் காரணமாகவே ஆர்த்ரைடீஸ் என்னும் மூட்டுவலி பிரச்னை ஏற்படுகிறது. இந்த அழற்சியை தடுக்கக்கூடிய பண்பு பூண்டிற்கு உண்டு. பூண்டில் அதிகமாக உள்ள Anti inflammatory பண்புகள் மூட்டு வலியை குணமாக்கி, அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்கும். பாலில் உள்ள கால்சியம், வைட்டமின் டி எலும்பு தேய்மானத்தைத் தடுத்து புதிய திசுக்கள் உருவாவதற்கு உதவுகிறது. இதனால் மூட்டு வலு பெறுவதோடு மட்டுமில்லாமல், மூட்டுவலி வராமல் தடுக்கும் ஆற்றல் பூண்டு பாலுக்கு உண்டு.
4. செரிமானக் கோளாறுகளை குணமாக்கும்: பூண்டுக்கு இயற்கையாகவே Digestive enzymesஐ தூண்டும் ஆற்றல் உண்டு. எனவே, சாப்பிடும் உணவுகள் எளிதாக ஜீரணம் ஆவதற்கும், வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்னைகளையும் தடுக்கும். பூண்டை பாலுடன் சேர்த்து சாப்பிடும்போது வயிற்றில் உண்டாகும் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளையும் தடுக்கும்.
5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் B6, வைட்டமின் C, செலினியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளன. இது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. பூண்டில் Anti inflammatory, anti bacterial, anti viral பண்புகள் உள்ளன. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நோய் கிருமிகளை அழிக்கிறது. எனவே, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற சமயத்தில் பூண்டு பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வர சளியினால் ஏற்படும் தொந்தரவுகள் தீரும். எனவே, வாரத்திற்கு ஒருமுறை பூண்டு பாலை எடுத்துக்கொள்வதால் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.