

எல்லா பருவகால மாற்றங்களையும் எதிர்கொள்ளும் அளவில், நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறையாதவாறு கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், கோடை வெயில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கச் சில வழிமுறைகள் உள்ளன. இதைக் கடைப்பிடித்தால் மருத்துவமனைக்குச் செல்லாமல், தேவையற்றச் செலவில்லாமல் இருக்கலாம்.
ஆடை: கோடை காலத்தில் உடல் சூடு அதிகமாகும்; அதைத் தடுக்கப் பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
காலை உணவு: காலை உணவில் கம்புச் சோறு, கேழ்வரகு கூழ், சோளச் சோறு இவற்றுடன் தயிர் அல்லது மோர் சேர்த்து, சின்ன வெங்காயத்துடன் சாப்பிட வேண்டும்.
நீராகாரம்: தினசரி ஒருவேளை பழைய சோறு (நீராகாரம்), சிறிது தேங்காய் பூ துருவல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகலாம். இதற்குத் தொட்டுக்கொள்ள நார்த்தங்காய், எலுமிச்சங்காய் ஊறுகாய், சுண்டை வத்தல், பாகற்காய், கொத்தவரங்காய் அல்லது மோர் மிளகாய் வற்றல் என்று ஏதாவது ஒன்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
பழங்கள்: இந்த உணவு சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது. சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம், வெண்பூசணிச் சாறு, பன்னீர் திராட்சை, பச்சை வாழைப்பழம் போன்றவற்றை அனைவரும் தொடர்ந்து தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியவை: சாப்பிடாமல் பட்டினி அல்லது விரதம் இருக்கக் கூடாது.
ஐஸ் வாட்டர்: குளிர்சாதனப் பெட்டித் தண்ணீரை குடிக்கக் கூடாது. இது உடல் சூட்டை அதிகப்படுத்தி மலக்கட்டுப் பிரச்சனையை உண்டாக்கும்.
சுவை கட்டுப்பாடு: அதிக காரம், அதிக புளிப்பு, அதிக உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது; இதனால் பித்தம் கூடி உடல் சூடு அதிகரிக்கும்.
தண்ணீர்: கோடைக்காலமாக இருந்தாலும், தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்த பின்பு தான் வடிகட்டிக் குடிக்க வேண்டும்.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதன் மூலம் உடல் சூடு தணியும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது இரு கண்களிலும் நன்றாக எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும், கண் பொங்குவது குறையும்.
எச்சரிக்கை: சளி, இருமல், தொண்டை கரகரப்பு, ஆஸ்துமா, ஜுரம், சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
இரவு பராமரிப்பு: இரவு படுக்கும்போது கை மற்றும் கால் பாதங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். வெளியில் சென்று வந்த பிறகு கண்டிப்பாக முகம், கை, கால்களை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.
கண்காணிப்பு: சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதய நோயாளிகள் ரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சாத்தியமான நோய்கள்: கோடையில் அம்மை நோய், மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல், மூலம், பௌத்திரம், சிறுநீரகத் தொற்று போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு; எனவே கவனமாக இருக்க வேண்டும்.
மருந்து: காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறலுக்கு மட்டுமல்ல, எல்லா நோய்களுக்கும் பக்கவிளைவு இல்லாத சித்த மருந்துகளை, தகுதி வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றுப் பயன்படுத்துங்கள். தேவைப்பட்டால் ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)