

கோடை காலம் வந்தாலே, தர்பூசணி பழ சீசன் ஆரம்பித்துவிடும். அதிக நீர்ச்சத்தும் மிகவும் லேசான இனிப்பு சத்தும் கொண்ட தர்பூசணி பழங்கள் , கோடைகாலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கையின் அற்புதமான கொடையாகும்.
தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள முடியும், அத்துடன் உடனடியாக புத்துணர்ச்சியும் பெற முடியும்.
சிறுவயதில் தர்பூசணி பழம் சாப்பிடும் போது நம்மை அறியாமல் அதன் விதைகளை விழுங்கி விடுவோம். அதன் பின்னர் நம் மனதில் ஆயிரம் கற்பனைகள் வளரும். வயிற்றுக்குள் தர்பூசணி செடி வளர்வது போலவும், அது வளர்ந்து வாய் வழியாக வெளியே வந்தால் என்ன செய்வது? என்பது போன்ற பயங்கள் சிறுவயதில் அனைவருக்கும் ஏற்பட்ட அனுபவங்கள்.
உண்மையில் தர்பூசணி விதைகள் நமது வயிற்றுக்குள் சென்ற பின்னர், முழுமையாக செரிமானம் ஆகிவிடும். அது வயிற்றில் முளைக்கும் என்பதெல்லாம் சிறுவயதில் மனதுக்குள் நிகழும் கற்பனைதான்.
தர்பூசணி விதைகளை தெரிந்தோ தெரியாமலோ சாப்பிடுவதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. தர்பூசணி பழம் மட்டுமல்ல, அதன் விதைகளும் கூட நிறைய மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடியவையாகவும் இருக்கின்றன.
ஒரு சிலர் தர்பூசணி பழங்களை சாப்பிடும் போது விதைகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு தான் சாப்பிடுகின்றனர். இன்னும் சிலரோ விதைகளே இல்லாத மரபணு மாற்றப்பட்ட தர்பூசணி பழங்களை சாப்பிடுகின்றனர். இதனால் உடலுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கப் போவது இல்லை.
தர்பூசணி விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
தர்பூசணி விதைகள் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கிய கிடங்காக இருக்கின்றன. இதில் புரதம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம்:
தர்பூசணி விதைகளில் உள்ள மெக்னிசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மெக்னீசியம் உயர்ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்பினை வெளியேற்றி இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது. அமெரிக்க இதய சங்கத்தின் ஆய்வுகளின் படி மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் இதயத்தை பராமரித்து, மோசமான அபாய நிலையில் இருந்து காப்பாற்றுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம்:
தர்பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது காய்ச்சல், சளி போன்ற பருவகால நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதோடு, உடலில் ஏற்படும் காயங்களை விரைவாகக் குணப்படுத்தவும் உதவுகிறது.
உடல் வலியிலிருந்து விடுதலை:
இந்த விதைகளில் உள்ள கால்சியம் மற்றும் தாமிரம் ஆகியவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கின்றன. இதனால் எலும்பு தேய்மானம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்புத் தேய்மானப் பிரச்னைகளை தடுக்க உதவுகிறது. மேலும் எலும்புகள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் உடல் வலி மற்றும் மூட்டு வலிகள் உள்ளிட்ட தொந்தரவுகள் நீங்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகை பராமரிக்கவும் தர்பூசணி விதைகள் பயனுள்ளதாக இருக்கின்றன.
தர்பூசணி விதைகளில் உள்ள 'ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தந்து முகத்தை பொலிவுடன் வைத்திருக்கிறது. முகப்பரு மற்றும் சுருக்கங்களையும் தடுக்கிறது.
இதில் உள்ள புரதம் மற்றும் இரும்புச்சத்து கூந்தல் வேர்களை வலுவாக்கி முடி உதிர்வுகளை தடுக்கிறது. மேலும் தர்பூசணி இலைகளில் உள்ள மெலனின் முடியை கருமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.