வேகவைத்த நிலக்கடலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. மகாத்மா காந்தி தினமும் அவித்த வேர்க்கடலை ஒரு கைப்பிடியும் ஆட்டுப்பாலும்தான் முக்கிய உணவாக எடுத்துக்கொண்டார். தினமும் 40 கிலோ மீட்டர் தொலைவு நடக்கும் வலிமையை அது அவருக்குத் தந்தது என்று சத்திய சோதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுத்த நிலக்கடலையை விட, வேக வைத்த நிலக்கடலையில் சத்துக்கள் அதிகம். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வேகவைத்த நிலக்கடலையின் ஐந்து பயன்கள்:
1. வேகவைத்த நிலக்கடலையில் புரதம், வைட்டமின்கள், மினரல்கள் அதிகம் உள்ளன. இது உண்பதற்கு மிகுந்த சுவையாக இருப்பதோடு, சத்துக்களையும் அள்ளித் தருகிறது. இதை வேக வைப்பதும் எளிது.
2. இதில் நிறைவுறா கொழுப்புகள் உள்ளன. எனவே, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை இது குறைக்கிறது. மேலும், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதனால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
3. வேகவைத்த நிலக்கடலையில் கலோரிகள் அதிகமிருந்தாலும் உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள புரதம், நார்ச்சத்து முதலியவை நாம் சிறிதளவு கடலையை உண்டாலும் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. எனவே, தேவையில்லாமல் வேறு உணவை நாடாமல் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
4. இதில் உள்ள குறைந்த கிளைஸ்மிக் இன்டெக்ஸ் உடலின் இரத்த சர்க்கரை அளவை சரியாக வைக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது. இதனால் இதயமும் ஆரோக்கியமாக செயல்படுகிறது.
5. வேகவைத்த நிலக்கடலையில் வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளது. தினமும் சிறிதளவு இதை எடுத்துக்கொண்டால் மூளை ஆரோக்கியமாக செயல்படும். மேலும், மூளை சம்பந்தமான நோய்கள் வருவது தவிர்க்கப்படும். ஞாபக மறதி, அல்சைமர்ஸ் போன்றவை வராமல் தடுக்கலாம்.