தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு உள்ளங்காலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து படுத்துக் கொண்டால் ஏற்படும் சில நன்மைகள் பற்றிய உண்மைகள் என்னவென்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே இரவு நேரங்களில் காலை யாராவது மசாஜ் செய்தால் நமக்கு இதமாக இருக்கும். அத்துடன் தூக்கமும் நன்றாக வரும். எனவே தினசரி தூங்குவதற்கு முன்பு இரவில் கால் பாதங்களில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் குணமாகும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் நமது பாதங்களில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் முடிவடைகிறது. அவை ஒவ்வொன்றுக்கும் நமது உடல் பாகங்களுடன் தொடர்பு இருக்கிறது.
நறுமணம் மிகுந்த எண்ணெய்களை தினசரி காலில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் மார்புச்சளி நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நமது காலில் ஐந்து தோல் அடுக்குகள் உள்ளது, குறிப்பாக இதில் மற்ற உடல் பாகங்களைப் போல மயிர் கால்கள் இல்லை என்பதால், நாம் தேய்க்கும் எண்ணெயானது உடனடியாக உறிஞ்சப்படும்.
மேலும் பாதத்தில் எவ்விதமான எண்ணெய் சுரப்பியும் இல்லை என்பதால், பாதத்தில் எண்ணெய் தடவும் போது அது வேகமாக உறிஞ்சப்படுகிறது. இப்படி உறிஞ்சப்படும் எண்ணெய்கள் ரத்த நாளங்களில் வேகமாக பயணித்து நன்மை ஏற்படுத்துமாம். உள்ளங்காலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யும் போது அந்த எண்ணெய் 20 நிமிடங்களிலேயே உடல் முழுவதும் சென்று கலந்து விடும் என ஆய்வு ஒன்று கூறுகிறது.
இரவு நாம் தூங்குவதற்கு முன் லாவண்டர் எண்ணெயை உள்ளம் காலில் தேய்த்து மசாஜ் செய்வது மூலம், தூக்கமின்மை பிரச்சனை நீங்கும் என்கின்றனர். அல்லது புதினா மற்றும் கிராம்பு எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படுமாம். அதேபோல யூகலிப்டஸ் எண்ணெய் தேய்க்கும்போது சுவாசம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் நீங்கும்.
இப்படி அத்தியாவசிய நறுமண எண்ணெய்களை உள்ளங்காலில் தடவி மசாஜ் செய்யும்போது அதன் மருத்துவ குணங்கள் அனைத்தும் உடலில் இறங்கி செரிமானம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளை சரி செய்து, ரத்த நாளங்களில் வேகமாக கலந்து உடலுக்கு பலன் அளிக்கிறது.