

கோடைகாலத்தில் முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் சீசன் ஆரம்பித்துவிடும். அல்போன்சோ முதல் தசேரி வரை விதவிதமான மாம்பழங்கள் உள்ள நிலையில் மாம்பழத்தின் சுவையும், மணமும் அனைவரையும் கவரும் விதமாக உள்ளது. ஆனால் மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பாக அதனை தண்ணீரில் ஊற வைத்து பிறகு சாப்பிட வேண்டும் என்பது நம் முன்னோர்களின் பழக்கமாக இருந்து வந்துள்ளது.
குடல் நோய் நிபுணர்கள் இதற்கு மருத்துவ ரீதியாக ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மாம்பழத்தை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ஊற வைப்பதால் பைட்டிக் அமிலம் குறையும்
உடலில் உள்ள இரும்பு, கால்சியம், சிங்க் போன்ற தாதுக்கள் உறிஞ்சப்படுவதை மாம்பழத்தில் இயற்கையாகவே இருக்கும் பைட்டிக் அமிலம் தடுக்கக் கூடியதாக இருப்பதால் இதனை 'ஆண்டி - நியூட்ரியன்ட்' என்று அழைப்பார்கள். இதனைத் தடுக்க மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைப்பதால் பைட்டிக் அமிலத்தின் அளவு குறைந்து உடல் சத்துக்களை உறிஞ்சி நீண்ட காலத்திற்கு தாது குறைபாடுகளை தவிர்க்க உதவுகிறது.
உடல் சூட்டை சமநிலைப்படுத்துகிறது
அதிக சர்க்கரையும் கலோரியும் கொண்ட பழமாக மாம்பழம் இருப்பதால் உடலில் சூடு அதிகரித்து முகப்பரு, உடல் சூடு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படுகிறது. இதனை தடுக்க மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைப்பதால் இயற்கையாகவே வெப்பம் குறைந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. மேலும் அமிலத்தன்மை, வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளை செரிமான அமைப்பு சரியாக செயல்பட்டு குறைக்கின்றன.
ரசாயனங்கள் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது
பூச்சிக்கொல்லிகளும் ரசாயனங்களும் மாம்பழ விளைச்சலில் பயன்படுத்தப்படுவதோடு, செயற்கை பழுப்பூட்டும் பொருட்களும் பயன்படுத்தப்படுவதால் நாம் சாப்பிடும் மாம்பழங்களை சாதாரணமாக கழுவுவதற்கு பதிலாக சாப்பிடுவதற்கு முன் 30 நிமிடங்கள் ஊறவைத்து சாப்பிடுவதால் ரசாயனங்கள் நீங்கி பாதுகாப்பாக சாப்பிட முடியும். மாம்பழத்தின் காம்பில் இருக்கும் சாறு தோலில் அலர்ஜி ஏற்படுத்தக் கூடும் என்பதால் ஊற வைப்பதன் மூலம் இப்பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.
சுவை மற்றும் மென்மையை மேம்படுத்தும் பயன்
மாம்பழத்தை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைப்பதால் ஈரப்பதம் அதிகரித்து சாறு நிறைந்ததாக மாறி, சுவை கூடி சாப்பிடவும் எளிதாக இருக்கும். மரத்திலிருந்து பறித்த போது இருந்த புத்துணர்ச்சியை தண்ணீரில் ஊறவைக்கும் போது பெறலாம்.
சீசனுக்கு ஏற்ற பழங்களை சாப்பிடுவதால் சத்துக்கள் அதிகம் கிடைத்து ஆரோக்கியம் மேம்படும். அதோடு மாம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் இருப்பதால் எளிய செயலான தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு முழு சத்துக்களையும் பெறுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)