

நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு விஷயம் இரத்தம். இரத்தத்தைப் பற்றிய படிப்பிற்கு ஹீமாட்டாலஜி (Hematology) என்று பெயர். இது கிரேக்க வார்த்தைகளான "ஹீம்" (இரத்தம்) மற்றும் "லாஜி" (ஆய்வு) என்பதிலிருந்து உருவானது. உடலில் உள்ள எலும்பு மஜ்ஜைகளிலிருந்து இரத்தம் உருவாகிறது. நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் என்ற ஒரு பொருளின் காரணமாகவே இரத்தம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
நமது இரத்தத்தில்(Blood) ஏராளமான வெள்ளையணுக்கள் காணப்படுகின்றன. இவை நமது உடலை ஏதேனும் தொற்று நோய்க்கிருமிகள் தாக்குகின்றனவா என்று கண்காணிக்கும் சீரிய பணியைச் செய்கின்றன. நம்ம உடம்பில் எங்கேயாவது தொற்று நோய்க்கிருமிகள் இருக்கின்றன என்று தெரிந்தால், உடனே அந்த இடத்தில் ஏராளமான வெள்ளையணுக்கள் ஒன்று திரண்டு தொற்று நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுகின்றன. இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வெள்ளையணுக்கள் இறக்கின்றன. இவையே சீழாக மாறி உடலைவிட்டு வெளியேறுகின்றன. வெள்ளையணுக்கள் “லூகோசைட்” என்று அழைக்கப்படுகின்றன.
பொதுவாக இரத்தமும் சிவப்பு நிறத்தில் இருந்தாலும் அதில் A, B, AB, O என நான்கு வகையான இரத்தப்பிரிவுகள் உள்ளன. இரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் ஆன்டிஜென்கள் என்றழைக்கப்படும் புரதம் மற்றும் சர்க்கரை அளவை அடிப்படையாகக் கொண்டு இரத்த வகைகள் தீர்மானிக்கப்படுகின்றன. A, B ஆன்டிஜென்கள் மற்றும் Rh காரணி ஆகியவற்றைக் கொண்டு A, B, AB, O என இரத்தக்குழுக்கள் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என்று வகைப்படுத்தப்படுகின்றன. இதை வைத்து அடிப்படையில் இரத்தமானது மொத்தம் எட்டு இரத்த வகைகளாக பகுத்தறியப்படுகிறது.
உலகில் உள்ள மக்கள் தொகையில் ஏழு சதவிகிதம் பேர்களுக்கு மட்டுமே ஓ நெகட்டிவ் வகை இரத்தம் காணப்படுகிறது. இத்தகைய இரத்த வகையினர் உலகளாவிய நன்கொடையாளர்கள் (Universal Donors) என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் இரத்தமானது எந்த வகையான இரத்தப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். உலகில் அரிதாக ஐம்பது பேர்களுக்கு மட்டுமே Rh பூஜ்ஜியம் வகை இரத்தம் காணப்படுகிறது. இத்தகையவர்களின் இரத்தத்தில் எந்த ஆன்டிஜென்களும் காணப்படுவதில்லை. இத்தகையவர்களின் இரத்தம் 'தங்க ரத்தம்' என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் புதிதாக B(A) வகை இரத்தம் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகையவர்களின் இரத்தத்தில் B ஆன்டிஜென்களுடன் A ஆன்டிஜென்களின் தன்மை சிறிது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இரத்தமானது உடலுக்குள் சுற்றி வருகிறது என்ற உண்மையை கி.பி.1616 ஆம் ஆண்டில் கண்டறிந்து முதன்முதலில் அறிவித்தவர் வில்லியம் ஹார்வி. ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கார்ல்லேம்ஸ் டெய்னர் என்பவர் 1901 ஆம் ஆண்டில் நமது உடலில் ஓடும் இரத்தத்தில் நான்கு அடிப்படை வகைகளை உள்ளன என்பதைக் கண்டறிந்தார்.
இவருடைய பிறந்தநாளான ஜீன் 14 ஆம் தேதியே 'உலக ரத்ததானம் செய்வோர்' தினமான கடைபிடிக்கப்படுகிறது.
டாக்டர் ஹஸ்டின் என்பவர் 1914 ஆம் ஆண்டில் இரத்தத்தில் சோடியம் சிட்ரேட் என்ற வேதியியல் பொருளைக் கலந்தால் இரத்தமானது உறையாது என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பின் மூலமாக மனிதர்களின் உடலிலிருந்து தானமாக பெறப்பட்ட இரத்தமானது இந்த முறையின் வாயிலாக பாதுகாக்கப்பட்டு சில நாட்கள் கழித்து தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தப்படுவது சாத்தியமானது. இதன் பின்னரே இரத்த வங்கிகள் உண்டாக்கப்பட்டன.
ஆரோக்கியமாக உள்ள எவர் வேணாலும் இரத்தத்தை தானமாகக் கொடுக்கலாம். ஒரு முறை நமது உடலில் இருந்து சுமார் 300 மில்லி லிட்டர் அளவுக்கு இரத்தத்தை மருத்துவர்கள் முறைப்படி எடுப்பார்கள். பதினெட்டு வயதில் இருந்து அறுபது வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள யார் வேண்டுமானாலும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை இரத்தத்தை தானமாகத் தரலாம். இப்படி நாம் தானமாகத் தரும் இரத்தம் சுமார் பத்து நாட்களில் மீண்டும் நம்முடைய உடலில் உற்பத்தி ஆகிவிடும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)