

உலக அளவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) பெண்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், ஒரு எளிய தடுப்பூசியின் மூலம் இதைத் தடுக்க முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
பெண் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி போட வேண்டும் என்று சொன்னாலே, பெற்றோர் மத்தியில் பல சந்தேகங்கள் எழுகின்றன.
இதனால் மாதவிடாய் வருவதில் சிக்கல் ஏற்படுமோ?
உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு, திருமணத்திற்குப் பின் குழந்தை பிறக்காமல் போய்விடுமோ?
இப்படிப் பல அச்சங்கள் நிலவுகின்றன. ஆனால், இவற்றில் எள்ளளவும் உண்மையில்லை என்று பல சர்வதேச ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது ஒருவகை வைரஸ் தொற்றால் (HPV - Human Papillomavirus) ஏற்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் அது புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. இந்தத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவே எச்பிவி (HPV) தடுப்பூசி போடப்படுகிறது.
தற்போது இந்தத் தடுப்பூசி, அரசின் தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டு இருப்பது ஒரு நல்ல முன்னேற்றமாகும். அரசு இதைச் செயல்படுத்தும்போது, சாமானிய மக்களையும் இது எளிதாகச் சென்றடையும்.
முன்பு இத்தடுப்பூசி அரசு திட்டத்தில் இல்லாதபோது, மருத்துவர்கள் தங்களிடம் வரும் பெற்றோரிடம் மட்டுமே இது குறித்துப் பேச முடிந்தது. போலியோ உட்பட மற்ற தடுப்பூசிகளை எப்படிச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அனைத்துக் குழந்தைகளுக்கும் போடுகிறோமோ, அதுபோலவே வரும் காலங்களில் எச்பிவி தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே முழுமையாக ஏற்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் நம் நாட்டில் "கர்ப்பப்பை வாய் புற்றுநோய்" என்பதே இல்லாத நிலை உருவாகும்.
தடுப்பூசியைத் தாண்டி, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் புற்றுநோய் அறிகுறிகள் உள்ளதா என்பதை அறிய "பேப்ஸ்மியர்" (Pap Smear) என்ற ஸ்கிரீனிங் பரிசோதனை உள்ளது.
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும்.
மார்பகப் புற்றுநோய்க்காக 'மேமோகிராம்' (Mammogram) செய்ய நினைப்பவர்கள் கூட, பேப்ஸ்மியர் பரிசோதனை குறித்துச் சிந்திப்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது.
எனவே, தடுப்பூசி மற்றும் முறையான பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் முறையாகச் சென்றடைய வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)