

'பழங்களையும் காய்கறிகளையும் நிறைய சாப்பிடுங்கள்' என்ற அறிவுரையை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். ஆரோக்கிய உலகில் பழங்கள், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இயற்கையின் கொடையாகப் போற்றப்படுகின்றன.
ஆனால் நாம் சத்துக்கள் நிறைய கிடைக்க வேண்டும் என்பதற்காக பழங்களுடன் சில ஒவ்வாத பொருட்களைச் சேர்த்து அறியாமையால் ஊடகங்களில் சொல்வதைக் கேட்டு சாப்பிட்டு விட்டு அவதிக்குள்ளாகிறோம். உதாரணமாக ஆப்பிள்களுடன் மாம்பழம், வாழைப் பழங்கள் மற்றும் ஆரஞ்சுப் பழச்சாறு போன்ற பழங்களின் கலவை ஆரோக்கியமற்ற சர்க்கரை உத்வேகத்துடன் உங்கள் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பழங்களில் உள்ள சர்க்கரை இயற்கையானது, அதனால் பெரிய தீங்கு எதுவும் ஏற்படாது என்று மக்கள் பொதுவாகக் கருதுகின்றனர். இருப்பினும், பழங்களில் இருந்து கிடைக்கும் அதிகப்படியான பிரக்டோஸ் கூட, கொழுப்பு கல்லீரல் அல்லது உடலில் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிப்பது போன்ற பின் விளைவுகளுக்கு வழிவகுக்கும். சாப்பிடும் நேரமும், பழங்களைச் சேர்த்து உண்ணும் முறையும் மிகவும் முக்கியம். மேலும், உணவுக்குப் பிறகு அதிக அளவில் பழங்களைச் சாப்பிடுவது அல்லது மாவுச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வது, உடலின் மொத்த கலோரிச் சுமையை அதிகரிக்கக்கூடும்.
எலுமிச்சை, ஆரஞ்சு, தர்பூசணி மற்றும் திராட்சைப் பழம் போன்ற அமிலத்தன்மை கொண்ட பழங்களை மாலையில் உட்கொள்ள வேண்டாம், ஏனெனில் அது செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
பிரியாணியை சாப்பிட்ட பின் தர்பூசணி சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு விஷ பாதிப்பு காரணமாக மும்பையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் என்ற அண்மை செய்தி அதிர்ச்சியை தருவதாக உள்ளது.
நான்கு பேர் கொண்ட அந்தக் குடும்பம் தன் வீட்டில் நெருங்கிய உறவினர்களுடன் ஒன்றாக இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டுள்ளனர். பின்னர் உறவினர்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்ற பின் நள்ளிரவில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் தர்பூசணி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுடன், நால்வரும் உடல்நலக்குறைவாக உணரத் தொடங்கினர். அவர்கள் நால்வரும் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் அனைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் தொடர்பாக தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
பொதுவாக அசுத்தமான உணவு அல்லது நீரை உட்கொள்வதால் உணவு நச்சாதல் ஏற்படுகிறது. இது வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். மேலும் பழங்கள், காய்கறிகளில் காணப்படும் பூச்சிக்கொல்லிகள், பூஞ்சை கொல்லிகளின் எச்சங்கள் மிகவும் அபாயகரமானவை. பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு மற்றும் எத்திலீன் கிளைக்கால் போன்ற வேதிப்பொருட்கள் சில சமயங்களில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப் படுகின்றன. தர்பூசணி போன்ற பழங்களில் நல்ல நிறத்திற்காக சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் தீங்கு விளைவிக்கக் கூடும். கவனமாக இருப்பது நல்லது.