Did you know that zucchini is powerful in destroying cancer cells?
Did you know that zucchini is powerful in destroying cancer cells?Abinaya Narayanan

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது சுரைக்காய் என்பது தெரியுமா?

கோடைக்கால காய்கறிகளில் ஒன்று சுரைக்காய். இது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காய்களில் ஒன்று. வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா. பயிரிட்ட 75 நாட்களில் பலன் தருவதாகும். சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கிறது. வைட்டமின் சத்துக்கள், நீர்ச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து போன்றவை சுரைக்காயில் உள்ளன.

சுரைக்காயில் புரோட்டீன், வைட்டமின் பி3, பி5, பி6, சி மேலும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் இயற்கையாகவே கிடைக்கின்றன. எனவே, இது எலும்புகளை வலுப்படுத்தவும், இதயம் பாதுகாப்பாக செயல்படவும் உதவும்.

சுரைக்காயில் உள்ள சில சத்துக்கள் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிப்பதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதிலுள்ள ‘லாக்டீன்ஸ்’ எனும் சத்து புதிய செல்களை உருவாக்கும் ஆற்றல் கொண்டது என்கிறார்கள் கர்நாடக மாநில குவெம்பு பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

சுரைக்காய் ஜூஸ் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்தது. காரணம் 100 கிராம் சுரைக்காய் சாற்றில் 12 மி.கி. சோடியமும், 81 மி.கி. பொட்டாசியமும் உள்ளன. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி சாறு பிழிந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வர சிறுநீரகக் கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்னைகள் குணமாகும். இந்தப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு சுரைக்காய். மேலும், கல்லீரல் வீக்கத்தை குறைத்து நன்கு செயல்பட உதவுகிறது.

சுரைக்காய் சாற்றை தலைமுடிக்கு தேய்த்து குளித்தால் செம்பட்டை வராது. நல்லெண்ணெயுடன் சுரைக்காய் சாறு சேர்த்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க தூக்கமின்மை மறைந்து நல்ல தூக்கம் வரும். நாவறட்சி என்பது கொழுப்பு மற்றும் வறுத்த உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டவர்களுக்கும், வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் பொதுவாகவே தோன்றும் பிரச்னையாகும். இவர்கள் நாக்கு வறட்சி ஏற்படும்போதெல்லாம், ஒரு கப் பச்சை சுரைக்காய் சாறில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் நாவறட்சி நீங்கும். குறிப்பாக, உப்பு போடாமல் இதை அருந்தக்கூடாது.

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலை இயக்கும் வாத, பித்த, கபத்தால் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்கம் உண்டாகிறது. பித்தத்தை குறைக்க சுரைக்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாகும். சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பித்தம் விரைவிலேயே சமநிலைப்படும். சுரைக்காய் கர்ப்பப்பையை பலப்படுத்த உதவுவதோடு, கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு தரும்.

இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும், உடல் எடையை குறைக்கும், அல்சர் புண்களை ஆற்றும், வயிற்று வலியை தவிர்க்கும், உடலில் அமிலச் சத்தை குறைக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் சுரைக்காய் சாற்றில் கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியம் பெற உண்ணவேண்டிய 8 உணவுகள்!
Did you know that zucchini is powerful in destroying cancer cells?

சுரைக்காய் சாப்பிடுவதால் உங்கள் உடல் வெப்பநிலை கட்டுப்படும். அதாவது, வெப்பத்தை எதிர்த்துப் போராட இது உதவுகிறது. சுரைக்காயை தொடர்ந்து சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

சுரைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து போன்றது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். சுரைக்காய் சாப்பிடுவதால் செரிமானம் சீராகும். அஜீரணம், வாய்வுத் தொல்லை பிரச்னைகள் இருக்காது. சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம், குடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், நீங்கள் உண்ணும் அனைத்து உணவின் முழுப் பலனையும் உடல் பெற்று உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது. சுரைக்காயில் அதிக அளவில் இரும்புச்சத்து காணப்படுவதால், உடலில் ஹீமோகுளோபினின் சரியான அளவை பராமரிக்க உதவுகிறது.

சுரைக்காய் சாறு குடிப்பதற்கு முன்பு அல்லது அதை எந்த முறையில் சாப்பிட்டாலும், முதலில் ஒரு துண்டு சுரைக்காயை அரிந்து பச்சையாக சுவைத்து பார்க்கவும். அது கசப்பான சுவையுடன் இருந்தால் அதை எறிந்து விடுங்கள். கசப்பு சுவை இல்லாத பட்சத்தில் சாறாக அரைக்கலாம். ஆனால், எப்போதும் சுரைக்காய் சாறு சாப்பிடும் முன்பு நன்கு தண்ணீரில் கழுவி விட்டு சாறு பிழியவும். சுரைக்காய் சாற்றை தயார் செய்த இரண்டு நிமிடத்தில் பருகி விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாக்டீரியா கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது.

சுரைக்காயை சாறாக குடிப்பதை விட, வேக வைத்து சாப்பிடுவதே நலம் பயக்கும். இல்லையென்றால் சுரைக்காய் சூப்பாக பருகலாம். சுரைக்காய் சாறை எப்போதும் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com