

இரவு உணவு மோகம் என்பது இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியத்திற்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பகல் முழுவதும் வேலையில் மூழ்கியிருப்பவர்கள் இரவில் மட்டுமே நிதானமாக நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ சேர்ந்து விதவிதமான உணவுகள் உண்பதை ஒரு கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்.
காலையில் அரசனைப் போலவும், இரவில் ஏழையைப் போலவும் உண்ண வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் காலை உணவை பெரும்பாலானவர்கள் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இரவு உணவை தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதும், உடனே உடலுக்கு எந்த பயிற்சியும் இன்றி உடனடியாக உறங்கவும் சென்று விடுகின்றனர். இதனால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை.
இரவு உணவு மோகத்தினால் (Dinner craze) ஏற்படும் ஆபத்துகள்:
உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற கோளாறு:
இரவு உணவு மோகம் குறிப்பாக தாமதமாகவும், அதிகமாகவும் உண்பது என்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
தாமதமாக சாப்பிடும் பொழுது உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக சேமிக்கப்பட்டு உடல் எடையை அதிகரிக்கின்றது. தாமதமாக எடுத்துக் கொள்ளும் உணவுகள் அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை பிரச்னைகளை உண்டாக்கும்.
மாரடைப்பு மற்றும் இதய நோய்கள்:
இரவு உணவை தாமதமாக எடுத்துக் கொள்வது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து உடலின் வளர்சிதை மாற்றத்தைக் குறைத்து, சர்க்கரை நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். முக்கியமாக இரவு உணவு கலாச்சாரம் Non-alcoholic fatty liver போன்ற கல்லீரல் பாதிப்புகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது
தூக்கமின்மை:
இரவு உணவு மோகம் காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு கூடுவதுடன் தூக்கமும் கெடுகிறது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இரவு படுத்ததும் தூக்கம் வருவதில்லை. காரணம் உடல் களைப்படையும் அளவுக்கு உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ இல்லாததுடன், பல மணி நேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை பார்ப்பதால் கண்கள் வறட்சி அடைந்து தூக்கம் எளிதாக வருவதில்லை. இது நாள் முழுவதும் சோர்வு மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.
மனநல பாதிப்புகள்:
இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக உண்பது அல்லது இரவு உணவு மோகம் மனரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
உணவுக் கட்டுப்பாடின்மை காரணமாக மன அழுத்தம், குற்ற உணர்ச்சி, பதற்றம் மற்றும் உடல் தோற்றம் குறித்த கவலைகளை ஏற்படுத்தும். இது தூக்கமின்மை, உடல் பருமன் மற்றும் உணவுக் கோளாறுகளுக்கு (Eating Disorders) வழிவகுக்கும்.
ஆரோக்கியமான இரவு உணவு முறை:
* இரவு 7:00 மணிக்குள் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த லேசான உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை தடுக்க உதவும்.
* வறுத்த, பொரித்த, காரமான மற்றும் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை இரவில் தவிர்த்து விட வேண்டியது அவசியம்.
* படுக்கைக்கு செல்வதற்கு 2-3 மணி நேரம் முன்பாக சாப்பிட வேண்டியது அவசியம்.
* அதேபோல் இரவு உணவை முற்றிலுமாக தவிர்ப்பது அல்லது நேரம் கழித்து வெகு தாமதமாக உண்பது இரண்டுமே ஆபத்தானது. சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவை, மிதமான அளவில் உண்பதே இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கும், புத்துணர்ச்சியான காலைப் பொழுதை அடையவும் உதவும்.