

உடம்பில் வரும் பிரச்னைகளில் நாம் பெரிதும் கண்டுக்கொள்ளாமல் விடுவது தலைவலியை (Headache) தான். சிலருக்கு தலைவலி வரும் போது உயிரே போய் விடுவது போல இருக்கும்; இன்னும் சிலருக்கு ஒருபக்கம் மட்டுமே வரக்கூடிய ஒற்றை தலைவலி வரும். இதுப்போன்று தலைவலிகளில் பலவிதம் இருக்கிறது. தலைவலி தானே என்று அலட்சியப்படுத்தக்கூடாது. ஏனெனில், தலைவலியில் ஆபத்தான தலைவலிகளும் இருக்கின்றன. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
தலைவலியில் (Headache) மிகவும் பிரச்னைக்குரிய, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய தலைவலியை எப்படி கண்டுப்பிடிப்பது? இதுவரை உங்களுக்கு தலைவலியே வந்ததில்லை. ஆனால், திடீரென்று Severe ஆன தலைவலி வருகிறது என்றால் கண்டிப்பாக அதை கவனிக்க வேண்டியது அவசியம். Thunderclap headache என்று சொல்வதுண்டு. அதாவது இடி வந்து நம் தலையில் இறங்கினால் எப்படி இருக்குமோ அதுப்போன்ற பயங்கர வலியுடன் இருக்கும் இந்த தலைவலி.
இந்த தலைவலி வரும்போது தலைவலி ஆரம்பித்த ஒரு நிமிடத்தில் பயங்கரமான வலியை உணர முடியும். இது எதனால் வருகிறது என்றால், நம் மூளையில் உள்ள ரத்தக்குழாய்கள் மிகவும் Pain sensitive ஆக இருக்கும். ரத்த குழாய் வெடித்து அதனால் ஏற்படுவது தான் thunderclap headache.
நம் வாழ்க்கையிலேயே இதுவரை வந்த மோசமான தலைவலியையும் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவரை உங்களுக்கு தலைவலி இல்லை. ஆனால், புதிதாக ஒரு தலைவலி வந்து அது அதிகமாகி கொண்டே போகிறதென்றால், அதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். இதுப்போன்ற தலைவலியுடன் வயதை வைத்துப்பார்க்கும் போது அது ஆணாக இருக்கட்டும் இல்லை பெண்ணாக இருக்கட்டும் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம்.
கேன்சர், பிரஷர், டீபி போன்ற நோய் இருப்பவர்களுக்கு திடீரென்று தலைவலி வருகிறது என்றால் கேன்சர் மூளையை தாக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. டீபி மூளைக்கு பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. சிலருக்கு திடீரென்று ஜூரம் வரும். அதனோடு தலைவலி வரும், கழுத்து Stiff ஆகி அதனுடன் சேர்ந்து தலைவலி வந்தால் கவனிக்க வேண்டியது அவசியம். இரவு தூக்கத்தில் தலைவலி வந்து அதனால் தூக்கம் கலைந்து எழுந்தால் அதை காண்டிப்பாக அலட்சியப்படுத்தக் கூடாது.
தலைவலி வருவதற்கு முன்போ அல்லது பின்போ வாந்தி வருகிறது. வாந்தி வந்த பிறகு தலைவலி குறைகிறது என்றால், தலையில் பிரஷர் அதிகமாகி அதனால் வாந்தி வருவதாக அர்த்தம். தலைவலி வரும்போது கண் பார்வை குறைகிறது என்றால் அதை முக்கியமாக கவனிக்க வேண்டும். இருமல் வரும்போது, எடை தூக்கும் போது தலைவலி வந்தால் அது சைனஸ், மைகிரேன் பிரச்சனையால் கூட வரலாம். இது ஆபத்து இல்லை என்றாலும் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது.
இந்த தலைவலிகள் அனைத்தும் ஆபத்தான தலைவலிக்கான அறிகுறிகளாகும். இதுப்போன்ற தலைவலிகள் வந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. இதெல்லாம் தலைவலிகளில் Red flags என்று சொல்லப்படுகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)