அரிசி என்றாலே பொதுவாக, அலறியடித்து, ‘ஐயோ இதில் கார்போஹைட்ரேட் இருக்கு, உடம்புக்கு ஆகாது’ என தவிர்ப்பவர்களே அதிகம். காரணம், நீரிழிவு போன்ற பாதிப்புகளுக்கு அரிசி உணவே காரணம் என்பதுதான். ஆனால், தற்போது விழிப்புணர்வு பெற்றுள்ள இயற்கை முறை அரிசி வகைகளில் ஒன்றான நவரா அரிசி நீரிழிவுக்கும் நல்லது எனும் தகவல் ஆச்சரியத்தை தருகிறது. நவரா அரிசியைப் பற்றிய சில தகவல்களை இந்தப் பதில் காண்போம்.
கேரளாவில் அதிகம் பயிரிடப்படும் இந்த நவரா அரிசி ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகை அரிசியாகப் பயன்பட்டு பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு நிவாரணம் தருகிறது. சமஸ்கிருதத்தில் இது, ‘சஸ்திகா அரிசி’ என்றும் இதற்குப் பெயர் உண்டு. சஷ்டி என்றால் அறுபது என்றும் பொருள் உண்டு. அதேபோல், 60 நாட்களில் விளைச்சலைக் கொடுக்கும் அரிசி என்பதால் இதற்கு, ‘சஸ்திகா அரிசி’ என்று பெயர்.
கேரள மக்களின் உணவாகவும் பயன்படும் இந்த அரிசியில் தயாரிக்கப்படும் கஞ்சியில், மூலிகைகளைக் கலந்து சிகிச்சை அளிக்கிறார்கள். இது உடலுக்கு பலத்தைத் தந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன் பல்வேறு நோய்களிலிருந்தும் காக்கும் என்பது ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்று.
நவரா அரிசி, சிறு குழந்தைகளுக்கு இளம் வயதில் பிடிக்கும் சளியைப் போக்கக்கூடியது. இந்த அரிசிக் கஞ்சி அல்லது சாதத்தை உணவாக எடுத்து வந்தால், சளித் தொந்தரவு குணமடையும் என்கிறார்கள்.
நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக இந்த நவரா அரிசிக்கஞ்சி பயன்படுகிறது. இந்தக் கஞ்சியை தவறாமல் உண்டு வந்தால் நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு நோயாளிகள் அரிசி உணவுக்கு மாற்றாக அவ்வபோது நவரா அரிசியையும் உணவில் சேர்க்கலாம்.
ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு முறைகளில் இதைப் பயன்படுத்தி நிவாரணம் தருகிறார்கள். உதாரணமாக, குறிப்பிட்ட சில மூலிகை இலைகளுடன் இதைக் கலந்து சமைத்தும் உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இது உடம்பில் உள்ள கழிவுகளை நீக்கி புத்துணர்ச்சி பெற உதவுகிறது.
மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்யவும், முதுகு வலி, பக்கவாதம், ருமட்டாய்ட் ஆர்த்திரைட்டிஸ் ஆகியவற்றுக்கும், சருமப் புண்கள், சொரியாசிஸ் போன்ற நோய்களை குணப்படுத்தவும் நவரா அரிசியை, மூலிகைகளுடன் கலந்து மருந்து போல தயாரித்துத் தருவது கேரளாவில் பிரபலமான சிகிச்சை முறையாகும்.
எடை குறைந்து மெலிதான தேகம் கொண்ட குழந்தைகளுக்கு வேக வைத்த நவரா அரிசி உணவைக் கொடுப்பதினால் எடை கூடும் வாய்ப்பு அதிகம். கர்ப்பிணிகள் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக வளர சத்துக்கள் நிறைந்த இந்த நவரா அரிசி உணவு உதவுகிறது.
நவரா அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் சஸ்திகா தைலம் பல்வேறு நரம்பியல் பாதிப்புகளை சரி செய்யவும், தசை அழிவிலிருந்தும் காப்பதாக ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.
வைட்டமின் சி அதிகம் உள்ள நவரா அரிசி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைக்க உதவுகிறது. இத்தனை சிறப்பு மிக்க நவரா அரிசியை நாமும் உணவுக்குப் பயன்படுத்தி உடல் நலம் காப்போம்.