பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்
பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் எவை தெரியுமா?

Published on

பாகற்காய் என்றவுடன் கசப்பு என்ற நினைவோடு முகம் சுழிப்பவர்கள்தான் அதிகம். நீரிழிவு நோயாளிகள் மட்டும் கடனே என்று சாப்பிடுவர். பெரும்பாலானவர்கள் கட்டாயத்தின் பேரிலேயே இந்தக் காயை சாப்பிடுவார்கள். ஆனால், பாகற்காயில் ஏராளமாக ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன. ஆனாலும், பாகற்காயோடு சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுகள் இருக்கின்றன அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

* முள்ளங்கி சாம்பாருக்கு பாகற்காய் வறுவல் சாப்பிட சுவையாகத்தான் இருக்கும். ஆனால், முள்ளங்கியை பாகற்காயுடனோ பாகற்காய் சாப்பிட்ட பிறகு அடுத்த வேளையோ எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

* முள்ளங்கியுடன் பாகற்காயைச் சேர்த்து சாப்பிடும்போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். அதனால் வாந்தி, தலைச்சுற்றல், மந்தம் மற்றும் குமட்டல் பிரச்னைகள் ஏற்படும்.

* பாகற்காய் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரையிலும் பால் குடிக்கக் கூடாது.  பால் பொருட்களை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இந்த இரண்டு உணவுகளும் சேரும்போது அஜீரணக் கோளாறை உண்டாக்கும். ஏற்கெனவே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த காமினேஷனைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். காரணம், அது வயிற்று வலி, வயிறு எரிச்சல், வயிறு உப்புசம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை உண்டாக்கக் கூடும். மொத்தத்தில் உடலின் ஆரோக்கியம் கெடும்.

* பாகற்காயுடன் மசாலா பொருட்களை சேர்க்கக் கூடாது. கிராம்பு, இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற வலுவான மசாலாப் பொருட்களை பாகற்காய் உணவுகளில் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், இந்த மசாலாப் பொருட்களின் காரமான தன்மை அவற்றின் இயற்கையான சுவையை மாற்றுகிறது. மேலும், செய்முறையின் சுவையையும் கெடுத்துவிடும். ஆனால், சீரகம் மற்றும் கொத்தமல்லி போன்ற லேசான மசாலாவை இந்த உணவுகளில் சேர்த்து சமைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வெள்ளரி விதையில் இத்தனை ஆரோக்கிய சத்துக்களா?
பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

* பாகற்காய் சாப்பிடும்போது அதோடு சேர்த்து மாம்பழம் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது. மாம்பழம் உடல் சூட்டை அதிகரிக்கும். பாகற்காயை அதோடு சேர்த்து சாப்பிடும் போது வயிற்று வலி, டயேரியா, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். செரிமானக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இந்த காமினேஷனைக் கட்டாயம் சாப்பிடவே கூடாது.

* பாகற்காயை மட்டன் போன்ற இறைச்சிகளுடன் சமைக்கக் கூடாது. ஒன்றாகச் சேர்த்தும் சாப்பிடக் கூடாது. இந்த இரண்டு உணவுகளும் சேரும்போது, உணவின் சுவை கெட்டுவிடும். மேலும், இந்த கலவை செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

* பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், மிக்சர்கள், சர்க்கரை தின்பண்டங்கள் போன்றவை பாகற்காயில் உள்ள இயற்கையான கசப்புடன் உடனே ரியாக்ட் செய்கிறது. எனவே இந்த கலவை மிகவும் மோசமானது. நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஆகவே, பாகற்காயுடன் முள்ளங்கி, மசாலா பொருட்கள், இறைச்சி, பால், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், மாம்பழம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடாமல் தவிர்த்து உடல் நலத்தை பேணுவோம்.

logo
Kalki Online
kalkionline.com