சிவப்பு காராமணி மிகவும் பிரபலமான ஒரு இந்திய உணவு. இது, வடநாட்டில் ராஜ்மா என்று அழைக்கப்படுகிறது. சிவப்பு காராமணியில் அதிக அளவில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது, உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. முக்கியமாக, பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை, மூட்டு வலியை குறைக்கிறது.
சிவப்பு காராமணியில் உள்ள சத்துகள்: இதில் வைட்டமின் பி, பி2, ஈ, கே மற்றும் கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், துத்தநாகம், ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா6 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
சிவப்பு காராமணியின் நன்மைகள்:
இரத்த சோகைக்கு அருமருந்து: ராஜ்மா இரும்புச்சத்துக்கான ஒரு நல்ல மூலமாகும். இது உடல் வலிமையையும், சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் ராஜ்மாவை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். இரத்த சோகை நோய் நீங்கி, உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இதனால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. அதனால் பெண்கள் மிகவும் அவசியம் உண்ண வேண்டிய பொருள் ராஜ்மா.
எலும்புகளை பலப்படுத்துகிறது: தற்போதைய சூழலில், எலும்புகள் பலவீனம் அடைவது ஒரு பொதுவான பிரச்னையாக இருக்கிறது. உடலில் கால்சியத்தின் அளவை அதிகரிக்க ராஜ்மா உதவுகிறது. அது எலும்புகளின் ஆரோக்கியம் காத்து, பலத்தை தருகின்றது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ராஜ்மாவில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மூளையின் திறனை மேம்படுத்துகிறது: ராஜ்மா மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் கே மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது மற்றும் மூளை தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. முதியவர்களிடத்தில் மிகவும் பொதுவாகக் காணப்படும் அல்சீமர் நோய்க்கான சிகிச்சையில் சிவப்பு காராமணி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது: இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது: நீரிழிவு நோயாளிகளுக்கு சிவப்பு காராமணி நன்மை பயக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
கொழுப்பைக் குறைக்கிறது: ராஜ்மா உடலில் சேரும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதனால் இதய நோய்களின் அபாயத்தைக் நீங்குகிறது. உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
சிவப்பு காராமணியின் பக்க விளைவுகள்: இதை அதிகமாக உட்கொள்வதன் மூலம் உடலில் அதிக அளவில் நார்ச்சத்து சேர்கிறது. இதன் காரணமாக வயிற்று வலி ஏற்படுகிறது. எனவே, வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொள்வது நல்லது.