

இதயத்தின் வாசல் என்று சொல்லுமளவுக்கு கண்கள் மிக முக்கிய உறுப்பாயிற்றே. இன்று நாம் அனைவருமே எப்போதும் ஏதாவது திரையில் கண் பதித்திருக்கிறோம். அதனால் கண்களுக்கு என்ன பாதிப்பு, கண் பாதுகாப்பு, பாரம்பரிய நோய்கள், முதுமை தரும் கண் பாதிப்பு இவற்றை பற்றி, நமது கேள்விகளுக்கு, Dr. B. கணேஷ் ( Eye Surgeon, Chairman, Jaya Eye Clinic, Chennai பதிலளிக்கிறார்.
பார்க்கும்போது பொருட்கள் வட்ட வடிவமாகவும் கருப்பாகவும் கருப்பை சுற்றிலும் ஒளியும் தெரிவது எதனால்? - R. சுமதி
இதற்கு பல காரணங்கள் உண்டு சுமதி மேடம். கண் அழுத்தம் (Glaucoma), கண்புரை (Cataract), கண்ணீரின் குறைபாடு (Dry Eye) கருவிழி பிரச்னைகள் (corneal defects), மைக்ரேன் (migraine) எனப்படும் ஒற்றைத் தலைவலி நீங்கள் கேட்கும் அறிகுறிகள், பிரதான கண் நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாகவும் இருக்கலாம். எனவே கண் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும்.
கேன்சர் சர்வைவரான எனக்கு கண் தானம் செய்ய விருப்பம். நான் கண் தானம் செய்ய இயலுமா? - மகாலட்சுமி சுப்ரமணியன்
மகாலட்சுமி அவர்களே, கேன்சர் சர்வைவராக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் கண் தானம் செய்ய இயலும். குறிப்பாக கேன்சர் கண்களுக்கு பரவாத வகையாக இருந்தால் தடையில்லை. இருந்தாலும் இறுதி முடிவாக, உங்கள் மருத்துவ வரலாறு, பாரம்பரியம், உடல்நிலை இவற்றை அடிப்படையாகக் கொண்டு கண் வங்கி, மற்றும் மருத்துவர் முடிவெடுப்பார்கள்.
சர்க்கரை நோய் கண்களை எப்படி பாதிக்கிறது? - குமார்
சர்க்கரை நோய், கண்களில் உள்ள நரம்புகளை பாதித்து, Diabetic Retinopathy என்னும் விழித்திரை பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பார்வை மங்குதல், கருப்புப் புள்ளிகள் காணுதல், கடைசியில் பார்வை இழப்பு கூட ஏற்படுத்தும்.
சில சமயம் கண்புரை ஏற்படுவதற்கு சர்க்கரை நோயும் ஒரு காரணமாகலாம். சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், மற்றும் ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
கண்களிலிருக்கும் ரத்தக் குழய்களிலிருந்து ரத்தக் கசிவு, விழித்திரையில் தெளிவான பார்வைக்கு உதவும் மேகுலா (Macula) பகுதியில் வீக்கம் ம்ற்றும் திரவ தேக்கம், விழித்திரை விலகல் ஆகியவை இதன் காரணங்களாகும்.
இன்றைய சிறுவர்களும், இளைஞர்களும், எப்பொழுதும், கம்ப்யூட்டர், செல்ஃபோன் ஏதாவது திரையைப் பார்த்தபடி இருக்கிறார்களே, அவர்கள், கண்கள் பாதிப்பு குறித்து என்ன முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்? உங்கள் அறிவுரை என்ன? - ஸ்ரீகாந்த்
20-20-20 விதி முறையைப் பின்பற்ற வேண்டும் ஸ்ரீகாந்த்.
அது என்ன என்கிறீர்களா?
20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரத்தில் உள்ள பொருளை, 20 நொடிகள் பார்க்கவேண்டும். திரை நேரத்தைக் கட்டுப்படுத்தவும் தேவையில்லாமல் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டைக் குறைக்கவும்.
சரியான ஒளி மற்றும் தூரத்தைக் கடைப்பிடிக்கவும். திரையிலிருந்து குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு அடி தூரம் வைத்துப் பயன்படுத்தவும்.
மிக அதிக ஒளி அல்லது இருளைத் தவிர்க்கவும்.
ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 15 முறை கண் இமைக்கவும். இல்லையெனில் கண் உலர்ந்து போகும்.
மாணவர்கள் ஆண்டுக்கொரு முறை கண் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.