அதிக காபி பருகுவதன் விளைவுகளும், காபிக்கு மாற்று பானங்களும்!

Effects of excessive coffee consumption and coffee substitutes
Effects of excessive coffee consumption and coffee substitutes

காலை எழுந்து பல் துலக்கியதும் ஒரு டம்ளர் காபி பருகாவிட்டால் பலருக்கு அன்றைய நாளே வீண் என்பது போல தோன்றும். காலை ஆறு மணி, ஒன்பது மணி, பதினோரு மணி, மாலை நான்கு மணிக்கு என ஷிப்ட் முறையில் காபி பருகுவோரும் உண்டு.

காபிக்கு நமது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டக்கூடிய சக்தி உள்ளது. அதன் மணமும், சுவையும், அதில் உள்ள காஃபீன் என்ற பொருளும் ஒருவிதமான மகிழ்ச்சி உணர்வைத் தரக்கூடியது. அதேசமயம் காபி குடித்து பழகியவர்களுக்கு அது குடித்தே தீர வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்தி விடும். ஒரு நாளைக்கு இரண்டு வேளை காபி குடிப்பது தவறில்லை. ஆனால், மூன்று, நான்கு கப் பருகும்போது அது நமது உடலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா?

தூக்கக் குறைபாடுகள், மனச்சோர்வு, வயிற்று வலி, அமிலம் சுரத்தல், உடம்பு வலி, எரிச்சல், நடுக்கம், கவனக்குறைவு, சிந்தனையில் தொந்தரவுகள் மற்றும் சில இதய சம்பந்தமான நோய்களைக் கூட கொண்டு வரும்.

காபி குடிப்பதை திடீரென்று நிறுத்தினால் ஏற்படும் உடல் கோளாறுகள்: திடீரென காபி குடிப்பதை ஒரேயடியாக நிறுத்தக்கூடாது. மயக்கம், குறைந்த ஆற்றல், சோம்பேறித்தனம், மனச்சோர்வு, கவனக்குறைவு போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் காபியை நிறுத்தி 12ல் இருந்து 24 மணி நேரத்திற்குள் நிகழலாம். ஒன்பது நாட்கள் வரை நீடிக்கலாம். எனவே, திடீரென்று காபியை நிறுத்தாமல், குடிக்கும் காபியின் அளவைக் குறைத்துக்கொண்டே வரலாம்.

காபிக்கு மாற்றான பானங்கள்:

மசாலா பால்: இது காஃபீனுக்கு நிகரான சத்துக்களை உடையது. இதில் சேர்க்க வேண்டிய பொருட்கள் இஞ்சி, இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு, ஏலக்காய் மற்றும் தேன்.

தயாரிக்கும் முறை: 200 மில்லி பாலை அடுப்பில் சிம்மில் வைத்து, அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் இலவங்கப்பட்டை பவுடர், தட்டிப் போட்ட இஞ்சி ஒரு துண்டு, ஒரு சிட்டிகை கருப்பு மிளகுத் தூள்சேர்த்து அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து இதை வடிகட்டி, கொஞ்சம் தேன் கலந்து பருகலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் வைட்டமின் சி உணவுகள்!
Effects of excessive coffee consumption and coffee substitutes

எலுமிச்சை தேநீர், ஜூஸ்: எலுமிச்சையில் வைட்டமின் சியும், ஆண்டி ஆக்சிடென்ட்டும் நிறைய இருக்கிறது. இது சருமத்துக்கு நிறமளிக்கக்கூடியது. சூரிய ஒளியில் வெளியில் சென்றால் சருமத்தை கருக்காமல் இருக்கச் செய்யும். சுடு தண்ணீரில் கால் மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து தேன் சேர்த்துக் குடிக்கலாம். இல்லாவிட்டால குளிர்ந்த நீரில் தேனும் எலுமிச்சை சாறும் கலந்து குடிக்கலாம். இதில் வெட்டிப்போட்ட வெள்ளரிக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்க்கலாம்.

புதினா டீ: ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் சிறிதளவு புதினா இலைகள் மற்றும் துளசி இலைகளைப் போட்டு, வடிகட்டி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் அருந்தலாம்.

லெமன் கிராஸ் டீ: ஒரு டம்ளர் நீரில் சிறிதளவு லெமன் கிராஸ் இலைகளை வெட்டிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

இந்த இயற்கை பானங்கள் சத்துகள் நிறைந்தது. உடலுக்கும் நல்ல ஆரோக்கியம் தருபவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com