

ஒரு பெண்ணிற்கு கர்ப்ப காலம் என்பது அவளுடைய வாழ்வில் மிகவும் முக்கியமான காலகட்டம் ஆகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இரு உயிர்களுக்கும் சேர்த்து உணவு உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அதேபோல் மன நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். அந்த வகையில் கர்ப்பகால பாதுகாப்பு குறித்தும் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு கெடுதல் விளைவிக்கும் முக்கியமான காரணிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ஆரோக்கியமான குழந்தையைப் பெற கர்ப்பகால பாதுகாப்பு ஏன் முக்கியம்?
பெற்றோர்களின் வயது
குழந்தைகளை பெற்றெடுக்க நினைக்கும் பெற்றோர்களின் வயது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் கருத்தரிக்கப்பட்ட சிசுவின் வளர்ச்சியும், மூளையின் படிப்படியான வளர்ச்சியும் வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே நமது முன்னோர்கள் கூறியது போல 'காலத்தே பயிர் செய்' என்ற பழமொழிக்கு ஏற்ப இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செயற்கையாக கர்ப்பத்தை தள்ளிப் போடாமல் குழந்தை பெற்றுக் கொள்வது ஆரோக்கியமான நடைமுறையாகும்.
சிசுவின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிகளும் கர்ப்பகால பாதுகாப்பு வழிமுறைகளும்
மருந்துகள்
கர்ப்பிணி பெண்கள் உடம்பில் எங்கு வலி ஏற்பட்டாலும் எக்காரணத்தை கொண்டும் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் வலி மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் குறை பிரசவம், கருச்சிதைவு, குறைந்த எடையுள்ள சிசு போன்ற பாதிப்புகளை சில மருந்துகள் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் இருப்பதோடு, ஆஸ்பிரின் (Aspirin) குழந்தையின் மூளையை பாதிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மன அழுத்தம்
கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம் தரித்த நாளிலிருந்து மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். கருவுற்ற முதல் மூன்று மாதத்தில் தாய் மன அழுத்தத்துடன் இருந்தால் கருப்பையில் உள்ள சிசுவின் மூளை செயல்பாடுகளை பாதிக்கும். மேலும் பிற்காலத்தில் அதாவது இளவயதில் உணவு உண்ணுவதில் பாதிப்பு, தூக்கமின்மை மற்றும் ஆழ்ந்த மன அழுத்தம் ஏற்படுத்தும் Schizophrenia பாதிப்பு ஏற்படுத்தி விடும்.
தவறான பழக்கவழக்கங்களைத் தவிர்த்து கர்ப்பகால பாதுகாப்பு உறுதி செய்வது எப்படி?
மது அருந்துதல்
மது அருந்துதல் என்ற கொடிய நோய் யாரிடமிருந்தாலும் அவர்களுக்கு தீங்கு தான். அதிலும் கர்ப்பிணி பெண்கள் மது அருந்தினால் அது பனிக்குடல் (Plecenta) வழியாக சென்று சிசுவிற்கு விஷமாக மாறிவிடும். கர்ப்பிணி பெண்கள் மதுவை அருந்தினால் குழந்தைகளுக்கு குறைந்த I.Q, கவன குறைவு, பிறவி குறைபாடு, முன் யோசனை அற்ற நடத்தை, இயக்க செயல் பண்புகளின் பாதிப்புகள் (Motor function disabilities) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் கர்ப்பிணிகள் மதுவை தொடவே கூடாது.
புகைப்பிடித்தல்
பீடி மற்றும் சிகரெட்டிலுள்ள நிகோடின் என்ற பொருள் கர்ப்பிணி பெண்களின் இரத்த குழாய்களை சுருக்கி பாதிப்பை ஏற்படுத்தி விடும். மேலும் பனிக்குடல் வழியாக சிசுவிற்கு செல்லும் ரத்தம், ஆக்ஸிஜன், சத்து பொருட்கள் போன்றவற்றின் அளவு குறைந்து சிசுவிற்கு சத்துக் குறைபாடு ஏற்பட்டு மூளை வளர்ச்சி மற்ற உறுப்புகளின் வளர்ச்சியை பாதித்துவிடும். நெடுநாள் வளர்ச்சியான மூளை வளர்ச்சிக்கு போதிய சத்துக்கள் அவசியம் என்பதால் புகை பிடிப்பதை கர்ப்பிணிப் பெண்கள் மறந்து விட வேண்டும். புகை பிடிப்பவர் அருகில் கூட இல்லாதவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இறைவனின் அற்புத சக்தியை பெற்று தாய்மை அடையும் பெண்கள் தங்களுடைய இன்பமான மற்றும் கடினமான கர்ப்ப காலத்தில் விழிப்புடன் செயல்பட்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்.
Referance:
'கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள்' புத்தகம் – யசோதரை கருணாகரன் (எழுத்தாளர் மற்றும் உணவு நிபுணர்).