

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பற்கள் மற்றும் ஈறுகளில் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கர்ப்ப காலத்தில் வாய் ஆரோக்கியம் (Pregnant women dental care) தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை தருகிறது.
கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய உடல் ரீதியான பிரச்சனைகள் ஹார்மோன் மாற்றங்களால் ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. ப்ரோஜெஸ்ரோன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஈறு நோய்களை உண்டாக காரணமாக இருக்கிறது.
கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சிக்காக பிளசெண்டா எனப்படும் தாய் சேய் இணைப்பு திசு சில ஹார்மோன்களை சுரக்கிறது. இவை சில சமயங்களில் இன்சுலின் செயலை தடை செய்யும் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால் ஈறு சிவந்து ஏற்கனவே உள்ள ஈறுநோய் மேலும் மோசமாகலாம்.
ஈறுகளில் ஏற்படும் பாதிப்பால் உருவாகும் கிருமிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும் இதன் காரணமாக குறை பிரசவம் ஏற்படலாம் குறைந்த எடை உள்ள குழந்தை பிறக்கும் அபாயமும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சில கர்ப்பிணிகளுக்கு ஈறுகளில் சிறிய கட்டி போன்று தோன்றும் இதை பிரக்னன்சி ட்யூமர் என்று சொல்வார்கள். இது ஒரு சாதாரண வீக்கம் தான். குழந்தை பிறந்து பின்பு தானாகவே குறைந்து விடும்.
தினமும் இரண்டு வேளை பல் துலக்குவதோடு இனிப்பு உணவு வகைகளையும், சர்க்கரை பானங்களையும் குறைக்க வேண்டும். வாந்தி ஏற்பட்டால் தண்ணீரால் வாயை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். புரதம், விட்டமின்கள், கொழுப்பு தாதுக்கள் என்று தினசரி தேவைக்கு ஏற்ப சமச்சீரான உணவுகளை சாப்பிட வேண்டும்.
பிரசவத்திற்கு பின் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் தானாகவே சரியாகிவிடும். ஒருவேளை பல் வலி, ஈறுகளில் வலி, ஈறுகளில் இரத்தக் கசிவு, வாய் துர்நாற்றம் இருந்தால் உடனடியாக பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
கர்ப்ப காலத்தில் பல் சார்ந்த சிகிச்சைகள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நான்கு, ஆறு மாத கர்ப்ப காலத்தில் மருத்துவரின் வழிகாட்டுதலில் பல் மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம். பற்களில் எடுக்கப்படும் எக்ஸ்ரே குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்டவை தான் என்றாலும் எக்ஸ்ரே எடுப்பதை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது.
கருத்தரிக்கும் முன் கர்ப்பம் உறுதியானவுடன் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது கர்ப்ப கலத்தில் ஏற்படும் பல் நோய்களை தவிர்க்க உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)