மாத்திரைகள் எடுக்கும்போது... கவனமாக இருக்க வேண்டிய உணவுகள்!

Tablets
Tablets
Published on

மருந்து மாத்திரைகள் சாப்பிடும்போது பெரும்பாலானோர் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. உண்மையில், சில மருந்துகளை உட்கொள்ளும்போது குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறினால், மருந்தின் செயல்பாடு மட்டுமின்றி, சில சமயங்களில் உடலில் விரும்பத்தகாத எதிர்விளைவுகளும் ஏற்படலாம்.

மருந்துகள் எடுத்துக் கொள்ளும் சமயத்தில், நாம் அருந்தும் பானங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உதாரணமாக, தேநீர் அல்லது காபி போன்ற பானங்களை மருந்து சாப்பிடும்போது உடனடியாக அருந்துவது நல்லதல்ல. இவற்றில் உள்ள காஃபின் சில மருந்துகளின் செயல்திறனைக் குறைத்துவிடும். மேலும், வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து அஜீரணம் போன்ற உபாதைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, மருந்து சாப்பிட்ட குறைந்தது ஒரு மணி நேரமாவது கழித்து இப்பானங்களை அருந்துவது நல்லது.

அதேபோல, பால் உடலுக்கு நல்லது என்பதால், எல்லா மருந்துகளையும் பாலுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது சரியல்ல. சில மருந்துகள் பாலில் உள்ள சில பொருட்களுடன் வினைபுரிந்து அவற்றின் செயல்பாட்டை மாற்றிவிடலாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பாலுடன் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

பலர், ஒருவேளை மருந்து எடுக்கத் தவறிவிட்டால், அடுத்த முறை இரண்டு மடங்கு எடுத்துக்கொள்வது சரியென்று நினைக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. ஒரே நேரத்தில் அதிகப்படியான மருந்தை உட்கொள்வது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம், குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கலாம். ஒருவேளை மருந்து எடுக்க மறந்துவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் சரியான வழி.

பொதுவாக, தலைவலி அல்லது உடல் வலிக்கு நாம் எடுத்துக்கொள்ளும் வலி நிவாரண மாத்திரைகளை குளிர்பானங்களுடன் சேர்த்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், குளிர்பானங்களில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மற்றும் அமிலங்கள் மருந்தின் உறிஞ்சுதலைத் தாமதப்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சிறுநீரகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Tablets

மேலும், மருந்து சாப்பிட்டவுடன் படுத்துக்கொள்வதும் நல்லதல்ல. சிறிது நேரம் கழித்து படுப்பது நல்லது. குறிப்பாக செரிமானப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மருந்து சாப்பிட்டவுடன் படுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

சில குறிப்பிட்ட நோய்களுக்காக மருந்து உட்கொள்ளும்போது சில குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். உதாரணமாக, சிறுநீரகப் பிரச்சினைகளுக்காக மருந்து எடுப்பவர்கள் வாழைப்பழம், தக்காளி, கீரை போன்ற பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் திராட்சைப்பழச் சாற்றைத் தவிர்க்க வேண்டும். தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுப்பவர்கள் சோயா மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகளை உட்கொள்பவர்கள் பூண்டு, இஞ்சி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com