

பொதுவாகவே நரைமுடி என்பது ஒருவரின் வயது அதிகமாவதால் ஏற்படும் சாதாரண செயலாகும். மேலும் நரைமுடிகள் ஒரு சிலருக்கு மரபணு காரணமாக கூட ஏற்படலாம். ஆனால், சிறு வயது குழந்தைகளிடம் நரைமுடி காணப்படுவது கவலைக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது. இது சாதாரண ஊட்டச்சத்து குறைபாடு அல்லது ஏதேனும் நோயின் அறிகுறியாக இருக்கிறதா? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நரைமுடி என்பதை ஒரு வகையில் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்; எந்த வயதாக இருந்தாலும் நரை தொடங்க ஆரம்பித்த உடன், உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தொடங்க வேண்டும். நரைமுடிகள் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு தென்படுவது ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம். ஆனால், ஒரு சில நேரங்களில் இது ஏதேனும் ஒரு நோயின் அறிகுறியாக கூட இருக்கும். அதனால், கட்டாயம் அதற்குரிய மருத்துவ சோதனைகளை செய்து காரணங்களை கண்டறிவது எளிதில் சிகிச்சை அளிக்க உதவும்.
ஒரு குழந்தையின் முடியின் நிறம் அவர்களின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஆகியவற்றின் அறிகுறிகளாக இருக்கின்றது. எந்த ஒரு மாற்றத்தையும் ஆரம்பகாலத்திலேயே கண்டறிந்து விட்டால், முன்கூட்டியே சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு தேவையற்ற பெரும் செலவுகளையும், மன உளைச்சலையும் குறைத்துக் கொள்ளலாம்.
நரைமுடி என்ற அறிகுறியை கண்டவுடன் அந்த குழந்தையின் தினசரி உணவு முறை, வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றுதான் அவர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடிக்கடி சோர்வாக காணப்படுகிறார்களா? அவர்கள் சுறுசுறுப்பு இன்றி காணப்படுகின்றனரா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். அவர்களின் உடலில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாடு இருக்கக்கூடும்.
போலிக் ஆசிட் , வைட்டமின் பி12, கால்சியம் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டினால் முடியின் ஆரோக்கியம் சீர்கெட தொடங்கி இருக்கும். ஒரு சில குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஆட்டோ இம்யூன் நோய்கள், தைராய்டு, உச்சந்தலையில் ஒரு சில சரும நோய்கள் காரணமாக கூட முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது போன்ற நோய்கள் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் தடையாக இருக்கலாம். உணவுக் குழல் சார்ந்த நோய்கள் கூட நரைக்கு காரணமாகிறது.
பெரும்பாலான சிறுவயது குழந்தைகளுக்கு தலைமுடி நரைப்பது அவர்களின் மரபணு சார்ந்த பிரச்னையாக இருக்கலாம். இது அவர்களுக்கு தீவிர நோய்களின் அறிகுறியாக இல்லாமல் கூட இருக்கலாம். குழந்தைகளின் ஆரோக்கியமற்ற மோசமான சில உணவு பழக்க வழக்கங்கள், அடிக்கடி கொழுப்பு மிகுந்த உணவுகளையும் துரித உணவு வகைகளையும் உட்கொள்வதும், நீண்ட நேரம் தூங்காமல் போன் அல்லது கம்ப்யூட்டரில் கேம்களில் விளையாடுவதும் நரைமுடிக்கு உந்துதலாக இருக்கின்றன. சிறு வயதிலேயே மன அழுத்தம் ஏற்பட்டாலும் முடிவேர்களில் உள்ள நிறமியான மெலனின் உற்பத்தி பாதிக்கப்பட்டு நரைமுடி ஏற்படும்.
இது தவிர ரசாயன கலந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள், கலரிங் போன்றவற்றை தலைமுடிக்கு பயன்படுத்துவதாலும் பல சந்தர்ப்பங்களில் மெலனின் பாதிக்கப்பட்டு முடி நரைக்க தொடங்கி விடுகிறது. சிறு குழந்தைகளுக்கு நரை முடி தோன்றாமல் தடுக்க அவர்களின் உணவு பழக்க வழக்கங்களில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் நிறைந்த உணவு வகைகளை வழங்குதல் வேண்டும்.
அவர்களின் தினசரி உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், இறைச்சி, கடல் உணவுகள் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வது அவசியம். ரசாயனம் சார்ந்த அழகு சாதன பொருட்களை தலைக்கு உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை மன அழுத்தம் இன்றி போதுமான அளவில் தூங்க வைப்பது மிகவும் அவசியம். இதற்கு தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)