மனிதனின் வாழ்க்கை இப்பொழுது ஒரு இலக்கை நோக்கி ஓடுவதில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவன் ஒரு நிலைக்கு மேல் சலிப்பு கொள்ளத் துவங்கி விடுகிறான். வாழ்க்கையின் மீதான பிடிப்பு குறையத் துவங்கும் நிலையில் அவனை ஒருமுகப்படுத்த, அவன் மனநிலையைச் சமன் செய்ய ஏதேதோ செய்ய முயற்சிக்கிறான். அந்த வகையில் இப்பொழுது பிரபலம் அடைந்து வருகிறது தியானம் எனப்படும் மெடிடேஷன்.
அப்படிப்பட்ட தியானத்தில், இரண்டு வகையினை இங்குக் காண்போம். ஒன்று Guided Meditation எனப்படும் வழிகாட்டப்பட்ட தியானம் மற்றொன்று மனதெளிநிலை தியானம் எனப்படும் Mindful meditation.
மன உளைச்சலா, மனச் சோர்வா, குழப்பமா, கோவம் உச்சத்திற்கு வருகிறதா அப்படி எனில் தியானம் செய்யுங்கள் என அடிக்கடி பிறர் கூற கேட்டிருப்போம், நாமுமே கூட முயற்சி செய்திருப்போம். இப்படி தியானம் செய்வதால் மனம் அமைதி படும், நினைவு திறன் கூடும், கவன சிதறல்கள் குறைந்து செய்யும் காரியத்தில் முழு ஆற்றல் செலுத்த இயலும், கோவம், ஆற்றாமை, படபடப்பு போன்றவை குறைந்து நிதானம், எதையும் கடக்கும் மனநிலை, மன நிறைவு போன்ற எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
ஆனால் ஆரம்பத்தில் நாமாகச் செய்யும் தியானத்தில் பெரிதாகப் பலன் இருப்பதில்லை. காரணம், நமக்கு ஏற்படும் கவன சிதறல், அலைபாயும் எண்ணங்கள் போன்றவை. சில சமயங்களில் நமக்கு ஏற்படும் சோம்பலின் காரணமாகவும் நாம் ஒழுங்காகச் செய்ய தவறுகிறோம்.
மனது ஒருமுகப்பட பழக்கப்பட்டவர்களால் எளிதில் முடியும். காரணம், அவர்களின் மனநிலையானது ஏற்ற தாழ்வுகளைச் சமமாகப் பார்க்க முயல்வதுதான். ஆனால் சாமானியர்களுக்கு இது எளிதில் சாத்தியப்படுவத்திலை. மனம் குரங்குபோல் இங்கும் அங்கும் தாவிக் கொண்டே இருக்கும். இதனால் நமக்கு சில பாதிப்புகளும் மனதளவில் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உதாரணத்திற்கு நம்மால் ஏன் நம் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை, நாம் செய்வது தவறா என்பது போன்ற பதட்டம் உண்டாகக் கூடும். இது மன அழுத்தத்தை இன்னும் மிகைப்படுத்தும். இதில் இன்னுமொரு சிக்கலும் உள்ளது. சில சமயங்களில் நாமாகச் செய்யும் தியானத்தின் பொழுது நம் மனம் நம்மை மாற்றுச் சிந்தனைக்குள்ளும் தள்ளிவிட வாய்ப்புள்ளது.
இதனை வழிமுறைப்படுத்த தான் வழிகாட்டப்பட்ட தியானம் (guided meditation) மற்றும் மனதெளிநிலை தியானம் (Mindful meditation) போன்றவை உதவுகின்றன.
வழிகாட்டப்பட்ட தியானம்:
இதில் ஒரு குரு அல்லது சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர் ஒருவர் மூலம், தியானம் செய்ய நினைப்பவர்க்கு எளிய மூச்சுப் பயிற்சியின் மூலமாகவோ, நிதானமான சொற்கள் மூலமாகவோ அவர்களின் எண்ண ஓட்டத்திலிருந்து அவர்களை தங்கள் மனதை மீட்டு ஒரு கற்பனை காட்சி அல்லது சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு மனதை மெதுவாக சமநிலைக்குக் கொண்டு செல்ல உதவ முடியும்.
மனதெளிநிலை தியானம்:
இது நாமாகச் செய்வது. நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, எந்த வித சிந்தனையாக இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல், அதனை சுயபரிசோதனையோ அல்லது இது சரி அது தவறு போன்ற எந்தவித எண்ண மதிப்பீடுகள் இடாமலோ இருப்பது, இந்த வகை தியானம் ஆகும். இப்படிச் செய்யும்பொழுது நம்மால் நல்லது, கெட்டது என இரண்டையும் சமமாகப் பார்க்கும் பக்குவம் வரும்.
இவ்வாறு தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டோம் என்றால், நம் மனம் ஒரு நிலைக்கு வரும். வாழ்க்கையை எதிர்கொள்ள நிதானமும், மன தைரியமும் கூடும்.