காலை உணவை தவிர்க்க வேண்டாம்!
காலை உணவு நமக்கு ஆற்றலையும் சுறுசுறுப்பையும் தருகிறது. எனவே. காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுங்கள். ஒரு நாள் முழுவதும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருக்க காலை உணவு மிகவும் அவசியம். காலை உணவில் புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, கார்போ ஹைட்ரேட் கொண்ட உணவை சேர்ப்பதன் மூலம் ஆற்றலுடன் இருக்க முடியும்.
காலை உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆற்றல் அதிகரிக்கும். இதில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி அதிகம் உள்ளது. எனினும. வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. அதாவது. காலை உணவைத் தவிர்த்து இரண்டு வாழைப்பழமும் தண்ணீரும் குடித்தால் போதும் என்று நினைக்காதீர்கள். அது ஆபத்தானது.
காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது நல்லது. முட்டையில் கொழுப்பு மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, உங்கள் உடலை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
காலை உணவாக ராகி கஞ்சி, ராகி இட்லி, ராகி தோசை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கும். மேலும், இதில் இரும்புச் சத்தும் அடங்கியிருக்கிறது. ராகி உணவு சாப்பிட்டால் உங்களுக்கு பசி தாங்கும். மந்தநிலை ஏற்படாது. இட்லி, தோசையும் சாப்பிடலாம். இவற்றிலும் நார்ச்சத்துகள் உள்ளன. ஆனால், இவற்றில் கலோரி குறைவு.
உலர் பழங்களில் நார்ச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதய ஆரோக்கியத்துக்கும் அவை நல்லது. ஆனால், பாஸ்டரி மற்றும் கேக்குகள் போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பொருள்களைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. இவற்றை சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் சுரப்பு குறைந்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
ஓர் எச்சரிக்கை: காலை உணவாக மறந்தும்கூட துரித உணவை வாங்கிச் சாப்பிட்டுவிடாதீர்கள். அவற்றால் நன்மைகளை விட தீமைகளே அதிகம்.