ஒரு காலத்தில் நீரிழிவு நோய் என்றால் என்னவென்றே தெரியாமல் மக்கள் இருந்த நிலையில், தற்போது அது ஒரு பொதுவான நோயாகி விட்டது. மக்களின் மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல வகையான மருந்துகளையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், மருந்துகளைத் தாண்டி இந்த நோயைக் கட்டுப்படுத்த உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
உலகெங்கிலும் ஏராளமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, பலரும் இந்த நோய் தங்களை தாக்கிவிடாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த நோய் தாக்காமல் இருக்க ஒரு சில குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதில் சில பழங்களும் அடங்கும். பொதுவாகவே, நீரிழிவு நோயாளிகள் பழம் சாப்பிடலாமா? கூடாதா? என்ற சந்தேகம் நிலவிவரும் நிலையில், நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது என இந்தப் பதிவில் காணலாம்.
வாழைப்பழம்: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அதில் அதிகப்படியான கிளைசெமிக் குறியீடு உள்ளதால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஃப்ரீ டயாபட்டிக் நோயாளிகள் வாழைப்பழத்தை தவிர்த்தால் அது அடுத்த கட்டத்துக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழம் சாப்பிட ஆசையாக இருந்தால் ஓரளவுக்கு காயாக இருக்கும் வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சர்க்கரை அளவு குறைவாகவே இருக்கும்.
அன்னாசி: உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அன்னாசிப்பழம் சாப்பிடவே கூடாது. இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், இதில் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இந்தப் பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
திராட்சை: திராட்சை பழத்தில் அதிக அளவு பிரக்டோஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடக்கூடாது. இதில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி இருந்தாலும், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் கொஞ்சம் சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
மாம்பழம்: மாம்பழத்தை உட்கொள்வது ஆபத்தானது என நான் சொல்ல மாட்டேன். ஆனால், அதை எந்த அளவில் உட்கொள்கிறோம் என்பதில் கவனம் தேவை. உங்களுக்கு சர்க்கரை அளவு ஏற்கெனவே அதிகமாக இருந்தால் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இதுதவிர, அதிக இனிப்புடைய பழங்கள் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீரிழிவு நோய் என்பது நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை விட, நாம் உண்ணும் உணவின் மூலமாகவே அதிகம் கட்டுப்படுத்தப்படும். எனவே, சரியான உணவு முறையைப் பின்பற்றி, உடலை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.