வேலை செய்வதிலேயே மிகவும் கடினமானது எதுவென்றால் இரவு நேரப் பணிதான். ஏனென்றால், இரவு நேரம் என்பதே நாம் தூங்குவதற்கான நேரமாகும். அந்த சமயத்தில் வேலை செய்வதென்பது உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் முற்றிலும் மாற்றிவிடும். எனவே, நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் நாம் நினைத்துப் பார்க்காத பல புதிய வேலைகள் வந்துவிட்டன. முன்பெல்லாம் பகலில் மட்டுமே வேலைக்குச் சென்று, இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து ஓய்வெடுப்பார்கள். ஆனால், காலம் மாற மாற வேலை செய்யும் நேரமும் மாறிவிட்டது. முன்பெல்லாம் காலையில் சூரியன் உதிக்கும் முன்னர் வேலைக்குச் செல்வது வழக்கம். அதேபோல, சூரியன் மறைந்ததும் வீடு திரும்பி விடுவார்கள்.
தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்த இந்தக் காலத்தில், நாம் அனைவரும் வேலை செய்யும் நேரமானது முற்றிலும் மாறிவிட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் பணியாளர்கள் மூன்று ஷிப்ட் வேலை செய்கிறார்கள். இத்தகைய வேலை நேரத்துக்கு ஏற்ப நாமும் மாறிவிட்டோம். அதாவது, டே ஷிப்ட், நைட் ஷிப்ட், மிட் நைட் ஷிப்ட் என பல வேலை நேரங்கள் உருவாகிவிட்டன. அதிலும் ஐடி வேலை என்றால் அதிக நபர்கள் நைட் ஷிப்டில்தான் வேலை பார்க்கிறார்கள்.
பொதுவாகவே, பகல் பொழுதில் நாம் செய்யும் வேலையை விட, இரவு நேர வேலைையின்போது நம்மில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் நமக்கு பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இத்தகைய பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் என்னவென்றால்...
முதலில் நீங்கள் உண்ணும் உணவின் மீது கவனம் செலுத்துங்கள். 6 மணிக்கு மேல் ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டாம். குறிப்பாக, எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிருங்கள். மேலும், துரித உணவுகளைத் தவிர்த்து, பழங்கள், காய்கறி உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.
நைட் ஷிப்ட் வேலை செய்பவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். ஏனென்றால், இரவு முழுவதும் வேலை செய்துவிட்டு பகல் பொழுதில் களைப்பாக தூங்கிவிடுவீர்கள். உடலுக்கு ஒரு இயக்கம் என்பதே இருக்காது. இதனால் பல பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, உடற்பயிற்சி உங்களுக்கு மிகவும் முக்கியமாகும்.
தினசரி நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு உடலில் ஹார்மோன் சமநிலையில் இருக்காது. அதிக நேரம் கணினியின் திரை முன்னால் அமர்ந்து வேலை பார்ப்பதால், முகத்தின் நிறம் மாற வாய்ப்புள்ளது. இதைத் தடுப்பதற்கு தினசரி முகத்தை மசாஜ் செய்து பராமரிக்க வேண்டியது அவசியம்.