அதிகம் எண்ணெய் நிறைந்த உணவுகளுக்குப் பின் கட்டாயம் குடிக்க வேண்டிய பானங்கள்!
இன்றைய காலத்தில் அதிகப்படியான துரித உணவுகளும் எண்ணெயில் வறுக்கப்பட்ட அல்லது பொறிக்கப்பட்ட உணவுகளும் அதிகரித்துவிட்டன. இதன் ருசி நன்றாக இருப்பதால் மக்களும் இதையே விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதனால் பல்வேறு சுகாதார பிரச்சனைகள் ஏற்படுகிறது. எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது நமக்கு ஒரு வித திருப்தியை அளித்தாலும், சில சமயங்களில் அசௌகரிய உணர்வைக் கொடுக்கலாம். இதைத் தவிர்ப்பதற்கு எண்ணெய் உணவுகளை சாப்பிட்ட பிறகு சில பானங்களை அருந்தினாலே போதும். அவை என்னென்ன என்று இப்பதிவில் காணலாம்.
பெருஞ்சீரக நீர்: எண்ணெய் உணவுகளை அதிகம் உட்கொள்ளும் நபர்கள் பெருஞ்சீரக நீர் அருந்துவது நல்லது. இந்த நீர் செரிமான அமைப்பை சிறப்பாக வைத்திருக்க உதவும். அதேபோல அசௌகரிய உணர்வையும் போக்கக்கூடியது. எண்ணெய் உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தீர்க்க வழிவகிக்கிறது. பெருஞ்சீரக நீர் அருந்துவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. பெருஞ்சீரகம் அல்லது வெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்து பருகினால் எல்லா விதமான வயிற்று உபாதைகளையும் போக்கிவிடும்.
வெந்நீர்: எண்ணெய் உணவுகளுக்குப் பிறகு சூடான் நீரை குடிப்பது மூலமாக அதில் உள்ள கொழுப்புகள் நீர்த்துப்போகச் செய்து செரிமானத்திற்கு உதவும். இது எவ்விதமான கடினமான உணவாக இருந்தாலும் நன்றாக செரிக்க உதவுகிறது. சூடான நீர் செரிமான மண்டலத்தின் தசைகளை தளரச்செய்து, எண்ணெய் உணவுகளால் ஏற்படும் வீக்கம் அல்லது அசௌகரியத்தை போக்குகிறது. மேலும் இது ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து நச்சுகளையும் நீக்க உதவும்.
சூப்கள்: காய்கறிகள் மற்றும் மூலிகைகள் சேர்த்து செய்யப்படும் சூப்களில் அதிகப்படியான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இது இயற்கையாகவே உடலில் உள்ள கெட்ட விஷயங்களை வெளியேற்றும். இத்தகைய பானங்கள் செரிமானத்திற்கு உதவி வீக்கத்தை குறைக்கும். மேலும் இதில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் நம்மை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். எண்ணெய் உணவுக்குப் பிறகு இத்தகைய சூப்களை குடிப்பதால் உடலுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது.
ப்ரோபயோடிக் பானங்கள்: ப்ரோபயாடிக் பானங்கள் நமது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் செரிமான அமைப்பு சிறப்பாக செயல்பட்டு எண்ணெய் பொருட்களால் உடலில் சேர்ந்த அதிக கொழுப்புகளை உடைக்க உதவுகிறது. இதனால் எண்ணெய் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி, ஒட்டு மொத்த செரிமான ஆரோக்கியமும் மேம்படும்.