

நாம் தூங்கும் போது உடல் ஓய்வு எடுக்கிறது என்று பலர் நினைக்கிறோம். ஆனால் உண்மையில், அந்த நேரத்தில் நமது மூளை மிகவும் செயலில் இருக்கும். குறிப்பாக கனவுகள் காணப்படும் நேரங்களில் மூளையின் பல பகுதிகள் தீவிரமாக செயல்படுகின்றன. விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தூக்கத்தின் போது மூளை அந்த நாளில் நாம் கற்ற தகவல்களை ஒழுங்குபடுத்தி சேமிக்கும். இந்த செயல்முறை தான் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. அதனால் தான், ஒரு விஷயத்தை படித்தவுடன் நல்ல தூக்கம் எடுத்தால் அதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது.
நாம் தூங்கும் போது பல்வேறு கட்டங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று REM தூக்கம் (Rapid Eye Movement) எனப்படும் நிலை. இந்த கட்டத்தில் தான் பெரும்பாலும் கனவுகள் உருவாகின்றன. இந்த நேரத்தில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்; கண்கள் வேகமாக அசையும்; ஆனால் உடல் அமைதியாக இருக்கும். ஆராய்ச்சிகள் REM தூக்கம் மூளையில் தகவல்களை சீரமைத்து, பழைய நினைவுகளுடன் புதிய தகவல்களை இணைக்க உதவுகிறது. இதனால் நமது கற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கிறது என்று கூறுகின்றன.
ஒரு நாளில் நாம் பல தகவல்களை பார்க்கிறோம்; கேட்கிறோம்; அனுபவிக்கிறோம். ஆனால், அவை அனைத்தும் உடனே நீண்டநாள் நினைவாக மாறாது. தூக்கத்தின் போது மூளை அந்த தகவல்களை ஆய்வு செய்து, முக்கியமானவற்றை மட்டும் நீண்டநாள் நினைவாக சேமிக்கிறது. இந்த செயல்முறையை Memory Consolidation என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். இந்த செயல்முறையில் கனவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான், சில நேரங்களில் நாம் கனவில் பார்த்த விஷயங்கள் உண்மையான அனுபவங்களைப் போல நினைவில் பதிகின்றன.
கனவுகள் வெறும் கற்பனை மட்டுமல்ல அவை நமது உணர்ச்சிகளுடன் மிக நெருக்கமாக தொடர்புடையவை. ஒரு நாள் முழுவதும் நடந்த சம்பவங்கள், நம் மனதில் ஏற்பட்ட பயம், மகிழ்ச்சி அல்லது கவலை போன்ற உணர்ச்சிகள் கனவுகளாக வெளிப்படலாம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கனவுகள் நமது உணர்ச்சிகளை புரிந்து கொள்ளவும் சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன. இதனால் மன அழுத்தம் குறைந்து, மூளை தெளிவாக செயல்பட முடிகிறது.
பல புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்கள் தங்களின் சிறந்த யோசனைகள் கனவுகளிலிருந்து வந்ததாக கூறியுள்ளனர். உதாரணமாக, சில கண்டுபிடிப்புகள் கூட கனவுகளில் தோன்றிய யோசனைகளால் உருவாகியுள்ளன என்று கூறப்படுகிறது. கனவுகள் மூளையில் உள்ள தகவல்களை புதிய முறையில் இணைக்க உதவுவதால், புதுமையான சிந்தனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் படைப்பாற்றல் மற்றும் பிரச்னைகளை தீர்க்கும் திறன் மேம்படுகிறது.
கனவுகள் மற்றும் நினைவாற்றல் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று பல ஆய்வுகள் கூறினாலும், அதற்கு முக்கியமான அடிப்படை நல்ல தூக்கம் தான். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தரமான தூக்கம் கிடைத்தால், மூளை தனது வேலைகளை சரியாக செய்ய முடியும். தூக்கம் குறைந்தால் நினைவாற்றல் பாதிக்கப்படலாம்; கவனம் குறையலாம்; மனநிலை மாற்றங்களும் ஏற்படலாம். அதனால் தூங்குவதற்கு முன் மொபைல் அல்லது அதிகமான ஒளியைத் தவிர்த்து அமைதியான சூழலில் தூங்குவது நல்லது.