
பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் வாரம் ஒருமுறை விரதம் இருந்து உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்குவார்கள். இன்றைய அவசர ஃபாஸ்ட் புட் காலத்தில் விரதத்திற்கு சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.
மசாலாக்கள் அதிகம் சேர்க்கப்பட்ட இத்தகைய உணவுகளை உண்பதால் தேவையற்ற பொருட்கள் உடலில் சேர்ந்து நச்சுக்களாக மாறிவிடுகின்றன. இந்த நச்சுக்கள் முதலில் நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து பின் நாளடைவில் நோய்களாக உருவாக ஆரம்பிக்கின்றன.
* நம் உடலில் சேரும் தேவையில்லாத நச்சுக்களை கரைக்கும் தன்மை காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் உண்டு.
* ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரஸ் பெக்டின் என்ற பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மைகொண்டது.
* மாதுளம் பழத்திற்கு புண்களை குணமாக்கும் தன்மையும் பப்பாளிக்கு அல்சரை குணமாக்கும் தன்மையும் உண்டு.
* பழங்களின் ராஜா என்று சொல்லப்படும் வில்வ பழம், எலுமிச்சை, பெரிய நெல்லிக்காய் இவற்றுக்கு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை அதிகம்.
* பச்சையம் என்னும் குளோரோபில் அதிகமுள்ள பச்சை காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* அரை வேக்காடு வேகவைத்த கீரைகள், சின்ன வெங்காயம், கத்தரிக்காய், பாகற்காய் முதலியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* வழக்கமாக குடிக்கும் டீயில் பால்-சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து குடிக்கலாம். அருகம்புல் சாறு/கஷாயம் மற்றும் பால் கலக்காத டீ இரண்டும் உடலில் சேரும் நச்சை நீக்கும் தன்மை உள்ளவை.
* வெற்றிலை உண்பது ஜீரண சக்தியை மேம்படுத்தும் ஒரு வழியாகும்.
சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, சாப்பிடுவதற்கு முன்பே பழங்களை உண்பதன் மூலம் உடலில் நச்சுக்கள் சேராமல் தடுக்க முடியும்!