உடலின் சிறிய அறிகுறிகளை அலட்சியப் படுத்தாதீர்கள் மக்களே! அப்புறம் பெரிய பிரச்னைதான்!

Ignoring body symptoms
Ignoring body symptoms
Published on

நமது உடல் ஒரு அற்புதமான இயந்திரம். அதன் இயங்கும் முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், சில அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்த அறிகுறிகள் சிறியவையாகத் தோன்றினாலும், அவற்றை அலட்சியப்படுத்துவது எதிர்காலத்தில் பெரிய சிக்கல்களுக்குக் காரணமாகலாம். 'அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது; அவற்றை முறையாக கவனிக்க வேண்டும்' என்ற விழிப்புணர்வு செய்தி சமீப காலங்களில் பெருமளவில் பரவி வந்தாலும், இன்னும் சிலர் அதை பின்பற்றாத நிலையிலேயே இருக்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

அறிகுறிகள் ஏன் முக்கியம்?

நமது உடல் வெளிப்படுத்தும் ஒவ்வொரு அறிகுறியும் உடலில் ஏற்படும் பிரச்னைக்கான ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம்.

உதாரணமாக,  தொடர்ச்சியான சோர்வு இருந்தால் தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு அல்லது தைராய்டு பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

நீண்டநாள் இருமல் இருந்தால் சளி, ஒவ்வாமை அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

திடீர் எடை இழப்பு/அதிகரிப்பு ஏற்பட்டால் தைராய்டு பிரச்சனை, நீரிழிவு அல்லது வேறு சில மருத்துவ நிலைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உணவு ஒவ்வாமை அல்லது குடல் சம்பந்தப்பட்ட நோய்களைக் குறிக்கலாம்.

இந்த அறிகுறிகளை நாம் கவனிக்காமல் விட்டால், ஆரம்பத்திலேயே குணப்படுத்தக்கூடிய ஒரு சிறிய பிரச்சனை பெரிய நோயாக மாறி, சிகிச்சைக்கு அதிக நேரமும், குணமடைய நீண்டகாலமும் தேவைப்படும் கடின நிலையை உருவாக்கக்கூடும்.

ஏன் அலட்சியப்படுத்தக்கூடாது?

பெரும்பாலானோர் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதற்கு சில பொதுவான காரணங்கள் உள்ளன.

வேலைப்பளு காரணமாக உடல்நலத்தில் கவனம் செலுத்த நேரம் கிடைப்பதில்லை.

சிலர் நோய் குறித்த பயம் காரணமாக மருத்துவரை அணுகத் தயங்குவர்.  

மேலும் சிலர் அறிகுறிகளின் முக்கியத்துவத்தை அறியாமல் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவர்.

இந்த அணுகுமுறைகள், நோயின் நிலையை மேலும் மோசமாக மாற்றக்கூடும்.

முறையாக கவனிக்க வேண்டியது எப்படி?

உங்கள் உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் அல்லது அசாதாரண உணர்வுகளைக் கவனியுங்கள். எந்தவொரு அறிகுறியும் தொடர்ச்சியாக இருந்தால், தாமதிக்காமல் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

மருத்துவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை சரியாக மேற்கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையும் சிகிச்சையும் முறையாக பின்பற்றுவது அவசியம். மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது, உணவு முறைகளை கடைபிடிப்பது போன்றவை மிக அவசியம்.

சீரான உணவு, போதுமான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்கள் வராமல் தடுக்கும்.

சிறிய அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக கவனம் செலுத்தினால், பெரிய நோய்களைத் தடுக்க முடியும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, அனைவரும் தங்கள் உடல் நலத்தை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் பெறுவதற்கான சிறந்த வழி இதுவே.

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின்   ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
பதட்டமா இருக்கீங்களா? இரவில் தூக்கம் வரலையா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...
Ignoring body symptoms

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com