பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளில் ஒழுங்கற்ற மாதவிடாய் தொந்தரவு கவலைத் தருவதாக இருக்கும். இதற்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், மன அழுத்தம் என பல்வேறு பிரச்னைகளை சொல்லலாம். நம் உணவு முறைகளும் இதில் பங்கு வகிக்கின்றன.
நம் உடலில் எஃப்.எஸ்.எச் (ஃபாலிக்கல் ஸ்டிமுலேட் ஹார்மோன்) என்ற ஹார்மோன் உள்ளது. இதுதான் பெண்களுக்கு ஓவரியில் கரு முட்டை உருவாகத் தூண்டுகோல். இந்த ஸ்டிமுலேஷன் சரியாக நன்றாக இருக்க வேண்டும். இப்படி அனைத்து ஹார்மோன்களும் ஒத்துழைத்தால்தான், கருப்பையில் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கான முறையில் இருக்கும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்களுக்கு கருமுட்டை எப்போது வெளிப்படுகிறது என்பதை சரியாக கணிக்க முடியாது. இதற்கு மிக முக்கியக் காரணம் உணவு முறை மாற்றம். இன்றைய இளம் தலைமுறையினர் இனிப்பு, உப்பு அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். குழந்தை பருவத்திலிருந்தே இந்தப் பழக்கம் ஆரம்பித்து விடுவதால் அவர்கள் வளர்ந்த பிறகு மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதில்லை.
இளம் வயதில் பால் பொருட்கள், மில்க் சாக்லெட் சாப்பிடுவதால் கருப்பையில் நீர்க்கட்டிகள் அதிகம் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த உணவுகள்,துரித உணவுகள், பிராய்லர் கோழி என அவர்கள் அதிகம் உட்கொள்ளும்போது உடல் எடை அதிகரிக்கிறது. பிற்காலத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைக்கு இதுவும் ஒரு காரணமாகிறது.
ஹார்மோன் சீரற்று இருத்தல், கருப்பை சுவற்றில் வரும் அடினோமையோசிஸ் பிரச்னைகள் போன்றவை ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைக்கு காரணமாகிறது. பெண்களின் உடலில் பித்தம் சரியாக இருக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் பித்த அளவில் மாறுபாடு, கபம் கூடுதலாக இருந்தாலோ மாதவிலக்கு தள்ளிப் போகும் என்கின்றனர்.
வளர்சிதை மாற்றம் சரியாக இருக்க வேண்டும். சித்த மருத்துவ தீர்வாக அசோக மரத்தின் பட்டையை எடுத்து கஷாயம் தயாரித்து பருகுவதால் இப்பிரச்னையை சரிசெய்யலாம். சோற்றுக் கற்றாழை லேகியம் எடுத்துக் கொண்டாலும் இந்தப் பிரச்னை சீராகும். அதிகமான இரத்தப் போக்கை கட்டுப்படுத்த வெந்தயம் சாப்பிடலாம். ஆடாதொடை கற்கம் அதிக இரத்தப் போக்கை உடனடியாக குணப்படுத்தும்.
மேலும், எளிய வழிகளாக உயரத்துக்கேற்ற எடையை பெண்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தல் நல்லது. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். வாழைத்தண்டு, வாழைப்பூ, சுண்டைக்காய், கடுக்காய் போன்ற துவர்ப்பு தன்மை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். தினமும் பழங்களும், நல்ல உணவு பழக்கம், உடற்பயிற்சி என தம்மை மேம்படுத்திக்கொள்ள இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைக்கு நல்ல பலன் கிடைக்கும்.