-மகாலெட்சுமி சுப்ரமணியன்
பெரியவர்கள் நாள்தோறும் ஏதாவது மன அழுத்தம் எனப்படும் ஸ்டிரெஸால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். வீட்டிலிருந்தபடியே எளிமையான முறையில் டென்ஷன் எனப்படும் ஸ்டிரெஸை குறைக்க ஸ்டிரெஸ் பால் (Stress Ball) கைகொடுக்கிறது.
மன அழுத்தம் மற்றும் அதீத உணர்ச்சி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவது, பதற்றத்தைக் குறைப்பது, கை தசைகளின் செயல்பாட்டை அதிகரிப்பது, நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துவது, கை விரல்களின் அசைவுகளைச் சீராக்குவது என பல்வேறு விதங்களில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஸ்டிரெஸ் பால் எனப்படும் மென்மையான பந்து உதவுகிறது.
உள்ளங்கையில் ஸ்டிரெஸ் பந்தைக் கடினமாக அழுத்தவும். அழுத்தியபடி வைத்திருந்து பின் மெதுவாகக் கைகளைத் தளர்த்தவும். இதுபோல் தொடர்ந்து பத்து முறை செய்யலாம். ஒரு நிமிட இடைவெளியில் மற்றொரு கையால் இதேபோல் செய்யலாம்.
ஸ்டிரெஸ் பந்தை அழுத்தும்போது கையில் இருக்கும் நரம்புகள் தூண்டப்படும். மூளையில் ஏற்படும் உணர்ச்சிகளுக்கான பகுதியில் அமைதிக்கான தூண்டுதலை இது ஏற்படுத்தும். இந்த சமிக்ஞை உடல் முழுவதும் அனுப்பப்படும். பதற்றமாக இருக்கும் சமயங்களில், கைகளில் ஸ்டிரெஸ் பந்தை வைத்து அழுத்திக்கொள்ள தன்னிச்சையாக நம் கவனம் மாறும். மேலும், உணர்ச்சிகள் சமநிலைப் படுத்தப்பட்டு உணர்வுகள் மாறும்.
என்டோர்பின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியைக் கொடுக்கும் இது வலி நிவாரணியாகவும் செயல்படும். தொடர்ந்து பந்தை உபயோகிக்க உள்ளங்கை மட்டுமல்லாது, முழு கைகளின் தசைகளையும் இறுக்கமாக்கும். இது சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுப்பதோடு ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுப் பொருட்களையும் வெளியேற்றும்.
மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு என அனைத்து தரப்பினருக்கும் ஸ்டிரெஸ் பால் உபயோகமாக இருக்கும். கையில் எலும்பு முறிவு, தசை நார் பிரச்னை போன்றவற்றின் காரணமாக, தொடர் சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும்.
மற்றபடி அனைவருக்கும் ஏற்ற ஸ்டிரெஸ் ரீலிவர் இந்த ஸ்டிரெஸ் பால்.