

இயற்கை நமக்கு அளித்த அபூர்வமான தாவரச் செல்வங்களில் ஒன்று ஆற்று இலுப்பை மரம். தாவரவியல் ரீதியாக Madhuca neriifolia என்று அழைக்கப்படும் இம்மரம், தென்னிந்தியாவின் நீர்நிலப்பகுதிகளையும் இலங்கையையும் தாயகமாகக் கொண்ட ஒரு பசுமை மாறா மரமாகும். ஆங்கிலத்தில் 'Indian Butter Tree' மற்றும் 'Sri Lanka Iluppai Tree' என்று அழைக்கப்படும் இம்மரம், பாரம்பரிய மருத்துவத்திலும் சூழலியல் பாதுகாப்பிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆற்று இலுப்பை:
நதிக்கரைகள், ஆற்றோரங்கள் மற்றும் ஓடைகளின் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் மட்டுமே இயற்கையாக வளரும் குணத்தைக் கொண்டதால் தமிழ்நாட்டில் ‘ஆற்று இலுப்பை’ என்று அழைக்கப்படுகிறது.
இது ‘சப்போட்டேசியே’ (Sapotaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரத்தின் உயரம் 10 முதல் 15 மீட்டர்கள் வரை வளரக்கூடிய நடுத்தர அளவு மரம். இலைகள் நீண்ட, கூர்மையான அடர் பச்சை நிறத்தில் கிளைகளின் நுனியில் அடர்த்தியாகக் காணப்படும். சிறிய, வெண்மையான நறுமணமிக்க பூக்கள் கொத்தாகப் பூக்கும். பூக்கள் இனிப்புச் சுவை கொண்டவை. சதைப்பற்றுள்ள பச்சை நிறக் காய்கள் பழுக்கும்போது இனிப்பான பழமாக மாறும். காய்களைக் கீறினால் பால் போன்ற திரவம் வெளிப்படும். நீளமான பழுப்பு நிற பிரகாசமான விதைகளில் அதிகளவு எண்ணெய் சத்து உள்ளது.
ஆற்று இலுப்பை மருத்துவப் பயன்கள்:
ஆற்று இலுப்பையின் இலை, பூ, பட்டை, காய், விதை மற்றும் எண்ணெய் என அனைத்து பாகங்களும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
இலுப்பை எண்ணெய்: விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் வாத நோய்கள், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. தோல் வியாதிகள் மற்றும் கொப்புளங்களுக்குச் சிறந்த வெளிப்பூச்சு மருந்தாகச் செயல்படுகிறது.
இலுப்பைப் பூ: இலுப்பைப் பூவில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. பூக்களைப் பாலில் காய்ச்சி அருந்துவது உடல் பலவீனத்தைப் போக்கி நரம்புகளுக்கு வலுவூட்டும். இருமல், சளி மற்றும் தொண்டை எரிச்சலுக்குப் பூவின் சாறு நிவாரணம் அளிக்கிறது.
பட்டை: பட்டையைக் காய்ச்சிக் குடிநீராக அருந்துவது வயிற்றுப்போக்கு, பசியின்மை மற்றும் வீக்கங்களைக் குணமாக்கும். வாய்ப்புண் மற்றும் ஈறு நோய்களுக்குப் பட்டைக் குடிநீர் சிறந்த வாய் கொப்பளிக்கும் மருந்தாகும்.
காய்: இலுப்பக்காயில் இருந்து வரும் பால் தோல் வெண்படலங்கள் மற்றும் படை நோய்களுக்கு வெளிப்பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது.
சூழலியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம்:
ஆற்று இலுப்பையின் வேர்கள் நதிக்கரை மண்ணை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வதால், வெள்ளக் காலங்களில் ஏற்படும் கடுமையான மண் அரிப்பைத் தடுத்து ஆற்றின் கரையைக் காக்கிறது.
முற்காலத்தில் கோயில்களிலும் வீடுகளிலும் விளக்கேற்ற இலுப்பை எண்ணெயே அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதன் எண்ணெயைச் சோப்பு தயாரிப்பிலும், எண்ணெய் பிண்ணாக்கை உடலுக்குத் தேய்த்துக் குளிக்கும் இயற்கைச் சோப்பாகவும் பழந்தமிழர்கள் பயன்படுத்தினர்.
இதன் இனிப்பான பூக்களையும் பழங்களையும் உண்பதற்கு வௌவால்கள், பறவைகள் மற்றும் அணில்கள் அதிக அளவில் வருவதால் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.
தற்போதைய நிலையும் பாதுகாப்பும்:
நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள், ஆற்றோர மரங்கள் வெட்டப்படுவது மற்றும் மணல் அள்ளுதல் போன்ற காரணங்களால் ஆற்று இலுப்பை மரங்களின் இயற்கை வாழிடங்கள் அழிந்து வருகின்றன.
இது சில பகுதிகளில் எண்ணிக்கையில் குறைந்து வருவதால் பாதுகாக்கப்பட்ட வேண்டிய இயற்கை வளங்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை: ஆற்றங்கரை ஓரங்களிலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் ஆற்று இலுப்பை மரங்களை மீண்டும் நட்டு வளர்ப்பது நதிப் பாதுகாப்பிற்கும், நமது பாரம்பரிய மருத்துவ முறைகளின் தொடர்ச்சிக்கும் இன்றியமையாததாகும்.
ஆன்மீகம், மருத்துவம், இயற்கைச் சூழல் எனப் பல பரிமாணங்களில் மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் ஆற்று இலுப்பை மரம், நமது பாரம்பரியக் கொடைகளில் ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவற்றை நட்டு வளர்ப்பது எக்காலத்திற்கும் ஏற்ற நற்செயலாகும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference