

உடல் எடையை விரைவாகக் குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் மருத்துவரின் ஆலோசனை மற்றும் முறையான பரிந்துரையின்றி எடை குறைப்பு மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்டுகளைப் பயன்படுத்துகின்றனர். உடல் எடை குறைப்பு மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துவது உடலில் கடுமையான பக்க விளைவுகளையும் விபரீதங்களையும் ஏற்படுத்தும்.
எடைக் குறைப்பு மருந்துகளால் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகள்:
செரிமானப் பிரச்சனைகள்:
இது மிகவும் பொதுவான மற்றும் உடனடியாக ஏற்படக்கூடிய விபரீதமாகும். கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு உப்புசம்.
குடல் இயக்கம் மாறுபடுவதால் கடுமையான மலச்சிக்கல் அல்லது நாள்பட்ட வயிற்றுப்போக்கு உண்டாகலாம். உணவைச் செரிக்கும் இரைப்பையின் வேகம் அளவுக்கு அதிகமாகக் குறைந்து, வயிறு செயலிழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தலாம்.
குமட்டல் மற்றும் வாந்தி:
மருந்தை உட்கொள்ளும் பலருக்கு ஆரம்பத்திலேயே கடுமையான குமட்டலும் வாந்தியும் ஏற்படுகிறது. மருந்துகள் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் போது தொடக்கக் காலத்தில் இப்படி அதிக குமட்டல் உண்டாகலாம்.
உணவு ஈர்ப்பு குறைவு:
பசியின்மை காரணமாக உடல் சோர்வு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பலவீனம் ஏற்படலாம்.
முகப் பொலிவு இழப்பு:
எடைக் குறைப்பு விரைவாக நடப்பதால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு முகம் பொலிவிழந்து காணப்படும் (Ozempic face).
ஹார்மோன் மாற்றங்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் போன்ற இதர ஆபத்துகள் வர வாய்ப்புள்ளது.
தீவிர விபரீதங்கள்:
கணைய அழற்சி மற்றும் பித்தப்பை கற்கள்:
மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளாத எடை குறைப்பு மருந்துகள் கணையத்தில் கடுமையான வீக்கத்தை (inflammation) ஏற்படுத்தக் கூடும். இது உயிருக்கே ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லலாம்.
உடல் எடை மிக வேகமாகக் குறையும் பொழுது பித்தப்பையில் கற்கள் (Gallstones) உருவாகும் ஆபத்து பல மடங்கு அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சப்ளிமெண்ட்டுகள் உடலில் கடுமையான நீரிழப்பை (Dehydration) ஏற்படுத்தி சிறுநீரகங்களை பாதிக்கலாம்.
தசை இழப்பு:
உடலின் கொழுப்பு மட்டுமே குறைய வேண்டும் என்பதே ஆரோக்கியமான எடை குறைப்பாகும். ஆனால் இந்த மருந்துகள் கொழுப்பை மட்டும் கரைப்பதில்லை. உடலுக்குத் தேவையான தசை நார்களையும் சேர்த்து இழக்க செய்கின்றன. இதனால் உடல் பலவீனமடைந்து சோர்வு அதிகமாகும். முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இல்லாமல் மருந்துகளை மட்டும் பயன்படுத்துவது உடலில் தசை வெகுவாகக் குறைய வழிவகுக்கும்.
சுய மருத்துவத்தின் அபாயங்கள்:
மருத்துவரின் முறையான கண்காணிப்பு இன்றி சில்லறை விற்பனையில் கிடைக்கும் மருந்துகளை சுயமாக எடுத்துக் கொள்வது உயிருக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
முறையற்ற மருந்துகள் மற்றும் ஊசிகள் சந்தையில் எளிதில் கிடைப்பதால் பலர் ஆபத்தை அறியாமல் பயன்படுத்துகின்றனர். தகுந்த உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் மருந்துகளை மட்டும் நம்புவது மிகவும் ஆபத்தானது.
இத்தகைய மருந்துகளை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்த முடியாது. இவற்றை நிறுத்திய சில மாதங்களிலேயே குறைந்த எடையை விட இரண்டு மடங்கு எடை வேகமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. எனவே அழகுக்காகவோ அல்லது விளம்பரங்களைப் பார்த்தோ சுய மருத்துவம் செய்து இத்தகைய விபரீத முயற்சிகளில் இறங்குவது கூடாது.
எடை குறைக்கும் மாத்திரைகளுக்கு பதிலாக இயற்கை முறையில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக கலோரி கொண்ட தின்பண்டங்களைத் தவிர்ப்பதும் நல்லது. முறையான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் போதிய தூக்கம் மட்டுமே பக்க விளைவுகள் இல்லாத ஆரோக்கியமான நிரந்தர தீர்வாகும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference