ரிட்டயர்ட் ஆனதும் மூலையில உட்காராதீங்க… டாக்டர் சொல்லும் 'முதுமையில் இளமை' ரகசியம்!

வயதாவதை நிறுத்த முடியாது; ஆனால் முதுமையில் இளமையோடு கெத்தாக வாழ்வது எப்படி? டாக்டர் பார்த்தசாரதி உடைக்கும் 10 வாழ்க்கை ரகசியங்கள்!
Septolescent lifestyle முதுமையில் இளமை
Septolescent lifestyle முதுமையில் இளமை
Updated on

அனைவருக்கும் வணக்கம். நான் டாக்டர் R. பார்த்தசாரதி. முதுமை என்பது வாழ்க்கையின் அஸ்தமனம் அல்ல; அது ஒரு புதிய விடியல். "70 வயதாகிவிட்டதே, இனி நமக்கென்ன இருக்கிறது?" என்று சாய்வு நாற்காலியிலேயே முடங்கிக் கிடக்காமல், பதின்ம வயது இளைஞர்களைப் போலச் சுறுசுறுப்பாகவும், ஆர்வத்தோடும் வாழும் 70+ வயதினரைக் குறிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் கருத்தாக்கம்தான் "செப்டோலெசென்ட்" (Septolescent).

'Septuagenarian' (70 வயதைக் கடந்தவர்), 'Adolescent' (இளமைப் பருவம்) ஆகிய இரண்டு ஆங்கில வார்த்தைகளின் அழகான கலவைதான் இது. முதுமையில் இளமை காணும் இவர்களின் வாழ்க்கை முறை, முக்கியமாக மூன்று தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது:

  1. சுறுசுறுப்பான வாழ்வு (Active Living): புதிய விஷயங்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது மற்றும் புதிய பொழுதுபோக்குகளை உருவாக்குவது.

  2. நோக்கம் நிறைந்த பயணம் (Purpose-Driven): சம்பாதிக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், சமூக சேவை செய்வது, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது என வாழ்வுக்குப் புதிய அர்த்தத்தைத் தேடுவது.

  3. உளவியல் உறுதி (Emotional Resilience): முதுமையை 'உடல் தளர்ச்சி' என்று சுருக்கிப் பார்க்காமல், அதை நேர்மறையான எண்ணத்தோடு ஏற்றுக்கொள்வது.

Septolescent lifestyle முதுமையில் இளமை
Septolescent lifestyle முதுமையில் இளமை

யார் இந்த 'செப்டோலெசென்ட்'? இவர்களின் 10 குணாதிசயங்கள்:

  1. இவர்கள் ஒருபோதும் சும்மா அமர்ந்திருக்க மாட்டார்கள். மூளைக்கு வேலை தரும்படி எதையாவது படிப்பது, எழுதுவது அல்லது புதிதாக ஒன்றை உருவாக்குவது என இயங்கிக்கொண்டே இருப்பார்கள்.

  2. இவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று நல்ல நண்பர்களாவது இருப்பார்கள். அவர்களுடன் அடிக்கடி அமர்ந்து காபியோ, தேநீரோ குடித்தபடி மனம் விட்டுப் பேசுவார்கள்.

  3. ஆடம்பரமான சுற்றுலாக்களைத் தவிர்த்துவிட்டு, புதிய இடங்கள், புதிய கலாச்சாரங்களை அனுபவப்பூர்வமாக உணரப் பயணிப்பார்கள். வாழ்க்கையின் நல்ல விஷயங்களை ரசிக்கத் தவற மாட்டார்கள்.

  4. கணவன்/மனைவி, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்களிடம் வெறும் 'அதிகாரம்' செய்யாமல், பரஸ்பர அன்பு, மரியாதை மற்றும் ஆதரவின் அடிப்படையில் உறவைப் பேணுவார்கள்.

  5. எப்போதுமே மனதில் ஒரு புதிய திட்டத்தையோ அல்லது இலக்கையோ வைத்திருப்பார்கள். கடந்த காலத்திலேயே தேங்கி நிற்காமல், வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்வார்கள்.

  6. தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வார்கள்; சத்தான உணவை உண்பார்கள். 'நோய்கள் என்பவை வாழ்வின் ஒரு பகுதிதான்' என அதை இயல்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

  7. ஒரு பிறந்தநாள், ஒரு பண்டிகை, பிடித்த டிவி சீரியல் அல்லது விடிந்த ஒரு புதிய நாள் எனச் சாதாரண விஷயங்களில் கூடப் பெருமகிழ்ச்சி அடைந்து கடவுளுக்கு நன்றி சொல்வார்கள்.

  8. ஒவ்வொரு நாளும் தங்களுக்குக் கிடைக்கும் நல்லவற்றுக்கு நன்றி பாராட்டுவதோடு, பிறருக்குத் தங்களால் இயன்ற நன்மைகளைச் செய்ய முயல்வார்கள்.

  9. மற்றவர்கள் கவனிக்கத் தவறும் பல அழகிய விஷயங்களை இவர்கள் ஆழமாக ரசித்துப் புன்னகைப்பார்கள்.

  10. தன்னிடம் இல்லாததை எண்ணிப் புலம்பாமல், இருப்பதை வைத்து ஆனந்தமாக வாழ்வார்கள். அதனால், தங்களை இந்த உலகத்தின் 'மகா கோடீஸ்வரர்களாகவே' கருதுவார்கள்.

இதையும் படியுங்கள்:
தொடர்கதை: நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.... அத்தியாயம் 4
Septolescent lifestyle முதுமையில் இளமை

"வயதாவதைத் தடுப்பது நம் கையில் இல்லை; ஆனால் அந்த முதுமையைக் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் ஏற்றுக்கொள்வது நூறு சதவீதம் நம் கையில்தான் உள்ளது."

இந்த அற்புதமான வாழ்வியல் தத்துவத்தைப் பற்றி நான் முன்பே கேள்விப்பட்டிருந்தாலும், இன்றுதான் அதை இன்னும் ஆழமாகவும் தெளிவாகவும் கற்றுக்கொண்டேன். இந்த விதியை வைத்து என்னையும் நான் மெருகேற்றிக்கொள்ளப் போகிறேன். உங்களுக்கும் இது பயன்படுமே என்ற எண்ணத்தில்தான் இதைப் பகிர்ந்துகொண்டேன்.

logo
Kalki Online
kalkionline.com