

கோடைக்காலத்தில் நாவல் பழங்களின் சீசன் தொடங்கிவிடும். சாலையோரங்களில் நாவல் பழங்கள் (Naval Pazham) குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாவல் பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த பழத்தில் வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம், போலிக் ஆசிட் உள்ளிட்ட பல தாதுக்களும் நிறைந்துள்ளது. இது மட்டுமல்லவாது நாவல் பழம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டுள்ளது. நீரழிவு நோய்க்கு இந்த பழங்கள் சிறந்த தீர்வாக இருக்கின்றன.
மருத்துவ குணம் கொண்டுள்ள எந்த ஒரு பழங்களையும் ஆரோக்கியமான மனிதர்கள் சாப்பிடுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. அதே நேரத்தில் உடல் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் ஒரு சில பழங்களை சாப்பிடுவது அவர்களுக்கு உகந்ததாக இருக்காது. அந்த பழங்களில் உள்ள மருத்துவ குணங்கள் சாப்பிடும் நபருக்கு சில சமயங்களில் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
சாதாரணமாக நாவல் பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இந்த பழத்தில் உள்ள புளிப்பு மற்றும் உவர்ப்பு தன்மை நமது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாக நெஞ்செரிச்சல், அஜீரணம், வாயு தொல்லை ஆகியவை ஏற்படலாம்.
நாவல் பழம் எப்பொழுது சாப்பிட்டாலும் தவறுதலாக கூட உடனே பால் அருந்தக்கூடாது. பாலிலும் நாவல் பழத்திலும் உள்ள வேதிப்பொருட்கள் நேரெதிர் நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக சேர்ந்தால் நச்சுத்தன்மை ஏற்பட்டு வாந்தி வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்.
சுவாச பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா தொல்லை கொண்டவர்கள் நாவல் பழங்களை தவிர்த்து விடுங்கள். இதில் உடலை அதிகப்படியாக குளிர்விக்கும் வேதிப்பொருட்கள் உள்ளது. இவை நுரையீரலில் அதிகப்படியான சளியை தேங்க வைக்கிறது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு உள்ளவர்கள் இந்த பழத்தினை சாப்பிடுவது மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதை போல் சளி இருமல் தொல்லை உள்ளவர்களும் நாவல் பழம் சாப்பிடக்கூடாது.
இந்த பழங்களில் அதிகப்படியான பொட்டாசியம் இருப்பதால் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களும், சிறுநீரக கோளாறு உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது. பொட்டாசியம் திடீரென்று இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்க கூடும், ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தால் பொட்டாசியத்தை வடிகட்ட இயலாது. இதனால் அவர்களுக்கு கூடுதலாக இதயம் சார்ந்த பிரச்சினைகளும் வரக்கூடும்
நாவல் பழத்தில் உள்ள ஆக்சலேட்டுகள் கால்சியம் உறிஞ்சுவதை தடுக்கின்றன. இதனால், கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுத்தும். நாவல் பழங்களில் ரத்த சர்க்கரையை விரிவாக குறைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், அறுவை சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்த பழத்தினை சாப்பிடக்கூடாது.
இந்த பழம் திடீரென்று அதிகமாக ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். அது சமீபத்தில் அறுவை செய்து கொண்டவர்களுக்கு மேலும் ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தலாம். இதனால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், முழு குணம் பெறும் வரை நாவல் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல அறுவை சிகிச்சைக்கு தயாராகும் நபரும் அதற்கு முன் இரண்டு வாரங்கள் நாவல் பழத்தை தவிர்ப்பது நலம்.
நாவல் பழங்களை சாப்பிடும் முறை:
ஆரோக்கியமானவர்கள் மஞ்சள் மற்றும் சிறிதளவு உப்பு தூவி நாவல் பழங்களை சாப்பிடலாம். பொதுவாக உணவு சாப்பிட்ட பின்னர் இந்த பழத்தினை சாப்பிடுவது நல்லது. நீரழிவு நோய் உள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே நாவல் பழங்களை சாப்பிட வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)