

உலகத்தில் ஏராளமானோர் படுத்தவுடன அசந்து தூங்கும் பேர்வழிகளை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். “எனக்குத் தூக்கமே வராது. வந்தாலும் காலை 3 மணிக்கு விழிப்பு வந்தால் வந்தது தான்” இப்படி ஒருவர் அலட்டிக் கொள்கையில் இன்னொருவர், “நான் இன்ஸோம்னியாவில் பாதிக்கப்பட்டவன். படுக்கையில் விழித்தபடி படுத்திருக்க வேண்டியது தான்” என்று வருத்தப்படுகிறார்.
இவர்கள் எல்லாம் காக்னிடிவ் பிஹேவியர் தெராபி ஃபார் இன்ஸோம்னியா என்னும் சிகிச்சையை மேற்கொள்பவர்கள் தாம் என்றாலும் பல இரவுகள் தூக்கமின்றி அவதிப்படுகிறார்கள். இதைப் போக்கும் ஒரு நவீன உத்தி தான் - NSDR (Non-Sleep deep rest) – நான் ஸ்லீப் டீப் ரெஸ்ட். அதாவது தூக்கமில்லாமல் ஆழ்ந்த ஓய்வு நிலையில் இருப்பது!
ஸ்டான்ஃபோர்டில் பிரபலமாக விளங்கும் ந்யூரோபயாலஜிஸ்ட் ஆண்ட்ரூ ஹ்யூபர்மேன் இந்த புதிய சொற்றொடரை உருவாக்கியுள்ளார். இது பாரதப் பண்பாடு உருவாக்கி இருக்கும் யோக நித்ரா அடிப்படையில் அமைந்திருக்கும் ஒன்றாகும். ஆனால் என் எஸ் டி ஆர் உத்தியில் ஆன்மீகம் கிடையாது. முற்றிலும் அறிவியல் ரீதியான ஒன்று தான் இது!
இது மனதை பல்வேறு விஷயங்களில் முறையாக கவனம் செலுத்தச் சொல்கிறது. மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்துப் பின்னர் மிக மிக மெதுவாக வெளியிட வேண்டும் – இந்த வழிமுறைப்படி!
இதனால் பாராசிம்பதடிக் நரம்பு அமைப்பு மண்டலம் தூண்டிவிடப்படுகிறது. ஆழ்ந்த ஓய்வை அனுபவிக்க முடிகிறது. ஹ்யூபர்மேன் கூறும் வழிமுறைப்படி(NSDR strategy) இதை தினமும் காலையில் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ இருபது நிமிடங்கள் செய்ய வேண்டும். இதனால் மூளையில் கார்டிஸால் குறைந்து உற்சாக ஹார்மோன் ஆன டோபமைன் அதிகம் சுரந்து சக்தியை ஊட்டுகிறது என்கிறார் அவர்.
இதை முடித்தவர்கள், “அப்பாடா! ஒரு மணி நேரம் ஆழ்ந்து உறங்கியது போல இருக்கிறது. மனம் தெளிவாக இருக்கிறது புதிய சக்தி பிறந்தது போல இருக்கிறது என்கின்றனர்.
2019ம் ஆண்டு பிஹேவியரல் ப்ரெய்ன் ரிஸர்ச் (நடத்தை சம்பந்தமான மூளை ஆராய்ச்சி) நிபுணரான நியூயார்க்கைச் சேர்ந்த நியூரோ விஞ்ஞானியான வெண்டி சுசுகி 13 நிமிடம் என் எஸ் டி ஆர் பயிற்சியைச் செய்தால் நினைவாற்றல் கூடுகிறது, மனநிலை சமப்படுத்தப்படுகிறது, கவனம் சிதறாமல் இருக்கிறது, உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று ஆய்வின் முடிவில் கூறுகிறார்.
தேவையானவர்கள் இதைச் செய்யும் விதத்தை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்கிறார்கள். அல்லது போட்காஸ்டிலிருந்து தங்கள் போனுக்கு தரவிறக்கம் செய்து கொள்கிறார்கள். இதை அன்றாடம் செய்து நல்ல தூக்கத்தை அடைகின்றனர்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)