நாம் எந்த அளவுக்கு உலகிற்கு பெட்ரோல், டீசல் முக்கியம் என பேசுகிறோமோ, அதை விட அதிகமாக சமையல் எண்ணெய் மிக முக்கியமானது. சமையல் எண்ணெய் எப்படி இருந்தாலும் அதை உணவில் சேர்க்கும் பழக்கம் மக்களிடம் உள்ளது. சமையல் எண்ணெய் தான் உணவிற்கு சுவையைக் கூட்டி உண்பதற்கு ஏற்ற பதத்தைக் கொடுக்கிறது. ஆனால் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படலாம்.
எண்ணெயின் விலை பன்மடங்கு இருப்பதால், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை இந்திய வீடுகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இப்படி மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? மற்றும் அந்த பாதிப்புகள் ஏற்படாத வகையில் எப்படி மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெயை பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது அதில் ஃப்ரீ ராடிகள்கள் உருவாகலாம். இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி பல நோய்களுக்கு வழிவகுக்கும். இது உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது சில சமயங்களில் புற்றுநோய் செல்களாக மாறி, தீவிர பாதிப்பைக் கொடுக்கலாம்.
மேலும் ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது அதன் அமிலத்தன்மை அதிகரித்து, அல்சர், இதய நோய், பார்க்கின்சன், தொண்டையில் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே மீண்டும் மீண்டும் ஒரே எண்ணையை பயன்படுத்தக் கூடாது என்பது பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும் சில எண்ணெய் வகைகளைப் பொறுத்து, அவை எந்த முறையில் சமைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை நன்றாக குளிர்வித்து, வடிகட்டி, காற்று நுழையாத பாட்டிலில் சேமிக்க வேண்டும். இப்படி செய்வதால் எண்ணெயை பாதிக்கும் துகள்கள் அகற்றப்படுகிறது. அதேபோல ஒரு முறை பயன்படுத்தி எண்ணெய் எந்த நிறத்தில் இருக்கிறது என்பதை கவனியுங்கள். அது ஒரு கிரீஸ் நிறத்தில் தடிமனாக இருந்தால் நிச்சயம் அதைப் பயன்படுத்தக் கூடாது.
மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சூடாகும்போது அதிலிருந்து புகை வந்தால் ஒருபோதும் அதை பயன்படுத்தக் கூடாது. எண்ணெயில் நச்சுப்பொருள் சேர்ந்தால் மட்டுமே சூடு படுத்தும்போது புகை வரும். எனவே இது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
எனவே சமையலுக்கு தரமான எண்ணெயை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். ஏதோ ஒரு எண்ணெய் பயன்படுத்தலாம் என நினைத்து மீண்டும் மீண்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பயன்படுத்திக் கொண்டிருந்தால், நிச்சயம் உங்களுடைய உடல் நலத்தை அது பாதிக்கலாம்.