Rose petals
Rose petalshttps://tamil.webdunia.com

ரோகம் போக்கும் ரோஜா இதழ்கள்!

Published on

ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர, வயிற்றுக் கடுப்பு, சீதபேதி ஆகியவை குணமடையும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.

ரோஜாப் பூ கற்கண்டு. தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் சாப்பிட்டு வர சிறுநீரகம் மற்றும் இதயம் பலமாகும். மலச்சிக்கல் தீரும்.

வாய் துர்நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களைப்போட்டுக் கொள்வதனால் துர்நாற்றம் நீங்கி நலம் பெறலாம்.

ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

ரோஜா இதழ்கள், வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பையினுள் ஏற்படும் இரத்த ஒழுக்கை நிறுத்தும்.

கண்கள் சிவந்து எரிச்சல் இருக்கும் நேரம் சில துளிகள் ரோஜாப்பூ பன்னீரை விட்டு வந்தால் எரிச்சல் குறையும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க ரோஜாப்பூ பன்னீர் பயன்படுகிறது.

ஒரு பங்கு ரோஜா பூ இதழ்களின் எடையோடு, இரு பங்கு எடை கற்கண்டு சேர்த்துப் பிசைந்து, பசையாக்கி, சிறிதளவு தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைக்க கிடைப்பது ரோஜா குல்கந்து ஆகும்.

காலை, மாலை சுண்டைக்காய் அளவு ரோஜா குல்கந்து சாப்பிட்டு வர, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாக சாப்பிட்டு வர இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை உறுதியடையும்.

சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றம் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீருடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
மனதில் மகிழ்ச்சியை பெருகச் செய்யும் 11 பழக்கங்கள்!
Rose petals

அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

ரோஜா இதழ்கள் இரத்தத்துடன் வரும் மலக்கழிவு அதாவது சீதபேதி என்கிற நோயை இது குணப்படுத்துகிறது.

ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காது வலி, காது குத்தலால் ஏற்பட்ட புண், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும்.

பித்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதித்ததும், வடிகட்டி, காலை, மாலை இரு வேளையும் 1 டம்ளர் வீதம் குடிக்க வேண்டும். இவ்வாறு 7 நாட்கள் குடித்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.

ரோஜாப்பூ கஷாயத்துடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகர்ந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு கோளாறுகள் அகலும்.

கருப்பான உதடு கொண்டவர்கள் அரைத்த பன்னீர் ரோஜா ஒரு ஸ்பூன் தேன் அரை ஸ்பூன் கலந்து உதடுகளின் மேல் பூசி வர, நாளடைவில் உதட்டின் நிறம் மாறும்.

ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும்.

logo
Kalki Online
kalkionline.com