

சஞ்சீவினி மூலிகையான 'சோலோ'வின் அறிவியல் பெயர் ரோடியோலா ரோசியா (Rhodiola rosea) ஆகும். மிகுந்த குளிர்ச்சியான லடாக் பகுதியில், அந்தச் சூழலுக்கேற்றபடி இந்த மூலிகைகள் வளர்கின்றன. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சோலோ மூலிகை, பல நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ஒரு சஞ்சீவினியாகும்.
இந்த மூலிகை உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வைத் தரக்கூடியது. லடாக் பகுதி மக்கள் இதன் இலைகளை உணவாகக் கொள்கிறார்கள். இதன் வேர், பூ மற்றும் செடிப்பகுதி ஆகியவை மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இது மிக உயர்ந்த லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் காணப்படுகிறது. ஆக்சிஜன் குறைவாக உள்ள இப்பகுதிகளில், நோயெதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடியதாக இம்மூலிகை செயல்படுகிறது. இராமாயணத்தில் வரும் சஞ்சீவினி மூலிகையின் பண்புகளை இது ஒத்துள்ளது. நோயெதிர்ப்பை அதிகரித்து, குறைந்த பிராணவாயு இருக்கும் இடத்தில் நல்ல சக்தியை அளித்து, சோர்வை நீக்கக்கூடியது.
இந்த மூலிகையின் ஆரோக்கிய நன்மைகள்:
1. மன அழுத்தத்தைக் குறைக்கிறது 2022ஆம் ஆண்டு ஆராய்ச்சியில், சோலோ என்ற ரோடியோலா மன அழுத்தத்தை நீக்கக்கூடியதாக அறியப்பட்டுள்ளது. உடலில் சோர்வை ஏற்படுத்தும் ஹார்மோன்களை இது சமச்சீராக வைக்கிறது; மேலும், மகிழ்ச்சியைத் தரக்கூடிய 'எண்டோர்பின்' (Endorphin) சுரப்பை ஊக்குவிக்கிறது.
2. ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்கிறது 8,000 அடிகள் உயரமிருக்கக்கூடிய இடங்களில் ஆக்சிஜன் அளவு குறைவாகவே இருக்கும். அந்தச் சமயத்தில், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவைச் சீராக்க சோலோ உதவுகிறது. குறிப்பாக, மலைப்பகுதிகளில் பணியாற்றும் போர்வீரர்களுக்கும், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
3. அறிவாற்றலை மேம்படுத்துகிறது மிக உயரமான மலைப்பகுதியில் இருக்கும்போது, உடலின் செயல்பாட்டுத் திறன் குறைய நேரலாம். ஆனால், இந்த மூலிகை மூளைப் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் (Neurotransmitters) நன்கு செயல்பட உதவி புரிகிறது. இதனால் மூளையின் செயல்பாடு மேம்படுத்தப்படுகிறது.
4. நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது சோலோ மூலிகையில் உள்ள ரோசாவின் (Rosavin) மற்றும் சாலிட்ரோசைடு (Salidroside) ஆகிய வேதிப்பொருட்கள், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய பண்புகளைப் பெற்றுள்ளன. இவை உடல் அழற்சியைக் (Inflammation) குறைத்து, அதிக உயரத்திலிருக்கும் கடுமையான சூழல் உடலைப் பாதிக்காதவாறு பாதுகாக்கின்றன.
5. இதயம் மற்றும் சுவாச மண்டலத்தை மேம்படுத்துகிறது இதயம் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குச் சோலோ மூலிகை சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. இது 'ஆக்சிடேடிவ்' அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக்குகிறது; நுரையீரலின் செயல்பாட்டையும் நல்ல நிலையில் வைக்கிறது.
பிரதமர் மோடியின் பார்வை "உயரமான இமயமலைப் பகுதியில் இது மனிதர்களுக்குச் சஞ்சீவினியாகச் செயல்படுவதால், இந்த மூலிகையின் முக்கியத்துவத்தை உலகளவில் பிரபலப்படுத்த வேண்டும்" என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார்.
2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பிரதமர் பேசியபோது, "சோலோ போன்ற நவீன சஞ்சீவினி மூலிகைகளை நாம் அதிகம் பயன்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையின் கொடையான இந்தச் சஞ்சீவினியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதனைப் பயன்படுத்துவது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)