அதிகமா தூங்கினாலும் பிரச்சனை தான்.. என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?
பலருக்கு, சரியாக தூங்கவில்லை என்றால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியும். ஆனால் அதிகமாக தூங்குவதும் சில நோய்களுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது.
உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் தூக்கம் மிகவும் முக்கியமானதாகும். எந்த அளவுக்கு நமது ஆரோக்கியத்திற்கு உணவு முக்கியமோ அதைவிட தூக்கம் நமக்கு முக்கியம். ஒழுங்காக ஒருவர் தூங்கும் போது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே ஒருவரது மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் தூக்கம் மிக முக்கியமானது. ஆனால் அதிகமாக தூங்குவதாலும் சில பாதிப்புகள் உடலில் ஏற்படுமாம்.
உடற்பருமன் ஏற்படலாம்: ஒருவர் குறைவாக தூங்கினாலும் அல்லது அதிகமாக தூங்கினாலும் இரண்டுமே உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என சில ஆய்வுகள் கூறுகிறது. சிலர் சராசரி நேரத்தை விட அதிகமாக தூங்குவது உண்டு. அதாவது தினசரி 10 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் உடல் எடை கூடும் அபாயம் இருக்கிறதாம். மேலும் வேறு சில விதமான நோய்களும் உடலில் உண்டாக வாய்ப்புள்ளது.
இதய நோய்: அதிகமாக தூங்கும் நபர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாம். அதேநேரம் பகலில் அதிகமாக தூங்கினால் இதய நோய் பாதிப்புகள் உண்டாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீரிழிவு நோய் ஏற்படலாம்: அதிக நேரம் தூங்குபவர்களுக்கு நீரிழிவு நோய் அபாயம் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க நீரிழிவு சங்கம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறைந்த நேரம் தூங்குவது அல்லது அளவுக்கு அதிகமாக தூங்குவது போன்றவை டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் முறையான தூக்கத்தை பின்பற்றுவது நல்லது.
மன அழுத்தம்: ஒருவர் அதிகமாக தூங்குகிறார் என்றால் அந்த நபருக்கு மன அழுத்தம் இருக்கிறது என அர்த்தம். அதிகமாக தூங்குவது மன அழுத்த பாதிப்புகளை மேலும் அதிகரிக்கும். ஒருவருக்கு மனச் சோர்வானது எந்த வயதிலும் ஏற்படலாம். பெரியவர்கள் குழந்தைகள் என அனைவருமே இந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே தூக்கம் சார்ந்த விஷயங்களில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இரவில் சரியான நேரத்திற்கு தூங்கி காலையில் சரியான நேரத்திற்கு எழுந்தால் உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இரவில் தாமதமாக தூங்கினால் காலையில் எழும்போதே சோர்வாக இருக்கும். மேலும் உங்களது அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படும். எனவே உங்களது தூக்க முறைகளில் கவனம் செலுத்தி பல உடல் பாதிப்புகளில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.