

வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. கோடையின் தொடக்கமே இப்படி என்றால் அக்னி நட்சத்திர வெயிலை எப்படி சமாளிப்பது என்கிற பதற்றம் வருவது இயற்கையே. கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெப்பத்தால் உடலில் பித்தம் கூடி தலைவலி வரும். இதற்கு சந்தன எண்ணெய் தடவுவது அல்லது வெட்டிவேர் எண்ணையை நெற்றியில் தடவுவது நல்ல பலன் அளிக்கும்.
1. வெப்பத்தாக்கம் (Heatstroke/Sunstroke):
அதீத வெப்பம் காரணமாக உடல் வெப்பநிலை 40°C (104°F) க்கும் மேல் உயர்ந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு அவசர மருத்துவ நிலையாகும். இது நரம்பு மண்டலத்தை பாதித்து மயக்கம், கடும் தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், கடுமையான உடல் உழைப்பும் இதற்கு முக்கிய காரணங்களாகும். இதற்கு போதிய அளவு தண்ணீர் குடிப்பதும், நிழலில் இருப்பதும், குளிர்ச்சியான நீரில் குளிப்பதும் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதும் சிறந்த தடுப்பு முறைகளாகும்.
2. நீர்ச்சத்து குறைபாடு (Dehydration):
உடலில் தேவையான அளவு நீர் இல்லாத நிலையில் ஏற்படும் நிலையாகும். இது தாகம், அடர் மஞ்சள் நிற சிறுநீர், வறண்ட வாய், களைப்பு மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். இதற்கு தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், வெயிலில் செல்லும் பொழுதும், உடற்பயிற்சி செய்யும் பொழுதும் அடிக்கடி திரவ உணவுகளை (இளநீர், மோர், பழச்சாறுகள்) அருந்துவதும் தீர்வாக இருக்கும்.
3. டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை:
அசுத்தமான நீர் மற்றும் உணவினால் பரவும். இதற்கு தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது தீர்வாக இருக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி சாப்பிடவும். டைபாய்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதும் சிறந்தது.
4. கண் நோய் மற்றும் கண் எரிச்சல்:
அதிக வெயில், புற ஊதா கதிர்கள், தூசி மற்றும் வறண்டகாற்று காரணமாக கண் நோய், கண் எரிச்சல், கண்ணில் நீர் வருவது, கண் உலர்ந்து போவது, கண் இமையில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இக்காலத்தில் ஏற்படுவது சகஜம். இதற்கு வெளியே செல்லும்பொழுது UV கதிர்வீச்சைத் தடுக்கும் தரமான கருப்பு கண்ணாடிகளை அணிவதும், அடிக்கடி கைகளை கழுவி, கண்கள் மற்றும் முகத்தை சுத்தமான நீரால் கழுவுவதும் நன்மை தரும். கண்ணில் அரிப்பு இருந்தால் கண்களை கசக்குவதை தவிர்க்கவும். இல்லையெனில் இது தொற்று பரவலை அதிகரிக்கும்.
5. வேனல் கட்டிகள்:
உடலில் வெப்பம் அதிகரிப்பதால் வேனல் கட்டிகள், பொடுகு போன்றவை ஏற்படும். வேனல் கட்டிகள் வருவதற்கு வெயில் மட்டும் காரணமல்ல; கோடைக்கால தொற்றின் காரணமாக ஏற்படுவதே வேனல் கட்டிகள் நீர்ச்சத்துள்ள பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் வேனல் கட்டிகள் வராமல் தடுக்கலாம்.
6. சின்னம்மை மற்றும் அம்மை நோய்கள்:
வெயில் காலத்தில் அம்மை நோய்கள் அதிகம் தாக்கும். சிறு பிள்ளைகளுக்கு அம்மை வந்தால் அதிகம் சிரமப்படுவார்கள். எனவே இளநீர், பழங்கள், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் என நிறைய எடுத்துக் கொள்வதன் மூலம் நீர்ச்சத்தை உடலில் சரியாக பராமரித்தாலே அம்மை நோய்களை தவிர்க்கலாம். தடுப்பூசி போடுவதும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தள்ளி இருப்பதும் தீர்வாக இருக்கும்.
7. தோல் பிரச்சனைகள்:
இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தேங்கி அரிப்பு, தோல் வீங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். சரும அலர்ஜிக்கு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது, குளிர்ந்த நீரில் குளித்து உடலை முடிந்தவரை தூய்மையாக வைத்துக் கொள்வது போன்றவை பலன் தரும்.
8. நீர்க்கடுப்பு:
சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், நீர்க்கடுப்பு, அதிக சூட்டால் அடிவயிறு மற்றும் அதைச் சுற்றிலும் லேசான வலி, சிறுநீர் பாதை தொற்று போன்றவை கோடை காலத்தில் அதிகம் ஏற்படும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததும் இதற்கு முக்கிய காரணங்களாகும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் இப்பிரச்சனையை சரி செய்து விடலாம்.
9. மூலச்சூடு:
மூல நோய், வயிற்றுச் சூடு, தொப்புளைச் சுற்றி வலி, சரும எரிச்சல், வேர்க்குரு போன்றவை கோடை காலத்தில் ஏற்படும் பொதுவான ஆரோக்கிய கேடுகளாகும். இதற்கு இளநீர், மோர், பதநீர் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை பழச்சாற்றில் சிறிது உப்பு, சர்க்கரை கலந்து குடிப்பதும் மூலச் சூட்டை குறைப்பதுடன், வயிற்று சூடு, தொப்புளை சுற்றி வலி, வேர்க்குரு போன்றவற்றை போக்க உதவும். நீர்ச்சத்து மிகுந்த தர்பூசணி, வெள்ளரி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, கிர்ணி பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
10. தவிர்க்க வேண்டியவை:
கோடை காலத்தில் உப்பு, புளி, மசாலா உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவு, காரமான மற்றும் அசைவ உணவு வகைகளையும், ஐஸ்கிரீம், செயற்கை குளிர் பானங்களையும் தவிர்க்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீர் கூட செரிமானத்தை பாதிக்கும். வெயில் அதிகம் இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக கோடைக்காலத்தில் மிகக் கடினமான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)