பருவநிலை மாற்றங்கள் இயற்கையின் விளையாட்டுகளில் ஒன்று. ஆனால், அந்த விளையாட்டு சற்று எல்லை மீறி போகும்போது நமது உடல் நலம் பாதிக்கப்படுவதும் உண்மை. ஆம், இந்த ஆண்டு கோடைக்கு முன்பே கொளுத்தும் கையில் துவங்கி விட்டது எனலாம். குறிப்பாக, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக அம்மை நோய் பரவலும் அதிகமாகிறது.
கோடைக் காலம் என்றாலே பல்வேறு தொற்று நோய்களும் பரவத் துவங்கிவிடும். அதில் ஒன்றுதான் அம்மை நோய்த் தாக்குதல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கும் இந்த அம்மை நோயானது, ‘வேரிசெல்லா’ என்ற வைரஸ் மூலம் ஏற்படும் தொற்று நோயாகும். சின்னம்மை, தட்டம்மை, மணல்வாரி அம்மை, பொண்ணுக்கு வீங்கி என பலவகை அம்மை நோய்கள் மனிதர்களை பாதிக்கின்றன.
இந்த அம்மை நோய் தாக்குதல்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. குறிப்பாக, கோடைக் காலங்களில் ஏற்படும் நோய் தாக்குதலில் சின்னம்மை எனப்படும் அம்மைதான் அதிக அளவில் பரவுகிறது எனலாம். அம்மை நோய் என்பது அந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மட்டுமின்றி, அந்தக் குடும்பத்தினர் மற்றும் அங்கு வந்து செல்லும் நெருங்கிய உறவினர்கள் போன்றவர்களுக்கும் எளிதில் பரவுகிறது. அவர்கள் இருமும்போதும் தும்பும்போதும் காற்றின் வழியாக வைரஸ் பரவி அடுத்தவருக்கு பாதிப்பை உண்டு பண்ணுகிறது.
திடீர் காய்ச்சல், உடல் அரிப்பு அல்லது நமைச்சல், கண்களில் எரிச்சல், தும்மல், சருமத்தில் கொப்புளங்கள், கன்னத்தில் வலியுடன் அதிக வீக்கம் போன்றவை அம்மை நோய்களின் அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரின் பரிந்துரையின்படி சிகிச்சை எடுத்தால் விரைவில் குணம் காணலாம்.
அம்மை நோய் என்பது பருவ காலத்தால் ஏற்படும் சரியாகக்கூடிய நோய்களாகும். இதைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், ஒரு முறை நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு பாதிக்கும் வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அவர்களின் உடல் தானாக ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் அவர்களது வாழ்நாளில் மீண்டும் அம்மை நோய் வர வாய்ப்பில்லை என்றெல்லாம் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகி இருப்பதும், கை கழுவுதல் போன்ற சுய சுத்தத்துடன் சுற்றுப்புற சூழ்நிலைகளை தூய்மையாக வைப்பதும், நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்துதலும், கோடைகாலம் முடியும் வரை தூய பருத்தி ஆடைகளை அணிவதும் நோய் தடுப்பு முறைகளாக பின்பற்றலாம். மேலும் நோய் பாதித்தவர்களுக்கு உண்டாகும் நீரிழிப்புக்கு பால், நீர் மோர், இளநீர், தர்ப்பூசணி, பழங்கள் என நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதும் அவசியம்.
தவிர்க்க முடியாத நேரங்களைத் தவிர, வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதை முற்றிலும் தவிர்ப்பதும், நோய் தாக்கத்தில் இருப்பவர்கள் பயன்படுத்திய ஆடைகள் அல்லது துண்டுகளை பயன்படுத்தாமல் இருப்பதும், இந்நோய் தொற்றாமல் தவிர்க்கும் வழிகளாகும். சுய வைத்தியம் பார்ப்பதை தவிர்ப்பதும் நன்று.