

கோடைக்காலத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கையில் ஐஸ்கிரிமை பார்த்தால் நம்மால் ஆசையை அடக்க முடியாது. அதன் அற்புதமான சுவையும் குளுமையும் நம்மை கட்டி இழுத்து விடும். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமையாகி உள்ளனர். வெயில் காலத்தில் பலரும் ஐஸ்கிரிமை பெட்டி பெட்டியாக வாங்கி வீட்டு பிரிசரில் அடுக்கி வைத்து விடுகின்றனர். என்ன தான் சுவை மிகுந்த பொருளாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.
வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் பார்மசூட்டிகல்ஸ் அண்ட் லைஃப் சயின்சஸ் என்ற மருத்துவ இதழில் ஐஸ்கிரீம் பற்றி ஒரு ஆய்வு முடிவு வெளியானது. அந்த ஆய்வின் படி, ஐஸ்கிரீமில் அதிக அளவில் கொழுப்பும் சர்க்கரையும் மட்டுமே உள்ளது. அதில் மற்ற ஊட்டத்துக்களும் வைட்டமின்களும் போதுமான அளவில் இல்லை. இதில் உள்ள கொழுப்பும் சர்க்கரையும் உடல் பருமன், நீரழிவு நோய், இதய நோய் ஆகியவற்றின் மூலமாக உள்ளது.
நாம் ஐஸ்கிரீம் சாப்பிடும் போது சில நிமிடங்கள் வாயிலும் தொண்டையிலும் உடனடியாகக் தற்காலிக குளிர்ச்சி ஏற்படுகிறது. இவை உடலின் வெப்பத்தில் குறைப்பதில்லை. ஐஸ்கிரீம் சாப்பிட்ட பின்னர் குளிர் உணர்வு உணவுப் பாதையில் ஏற்படுகிறது. சில நொடிகளில் அந்த தாற்காலிக உணர்வு மறைந்து மீண்டும் உடல் சூடாகி விடுகிறது. அதில் இயற்கையான குளிரூட்டும் மூலங்கள் இல்லை, தாற்காலிக குளிர் முடிந்த உடன் உணவுப் பாதையின் சூடு மேலும் அதிகரிக்கிறது. அதே நேரம் அதிக சர்க்கரை இரத்தத்தில் கலக்கிறது. இது தற்காலிக புத்துணர்ச்சி மகிழ்ச்சி ஆகியவற்றை உணர வைக்கிறது.
ஐஸ்கிரீமை அதிகமாக சாப்பிட்டால் உடலின் வெப்பச் சமநிலையை சீர்கெட வைக்கிறது. அந்த நேரத்தில் உணவுப் பாதையில் ஏற்படும் குளிர் உணர்வை தடுக்க உடல் அதிகப்படியான வெப்பத்தைக் ஏற்படுத்தும். இது உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்வதால், வெப்பம் சார்ந்த ஆரோக்கிய கோளாறுகள் உண்டாகும். இதனால், அதிக வியர்வை, சோர்வு ஆகியவை ஏற்படும்.
ஐஸ்கிரீமில் உள்ள அதிகப்படியான சர்க்கரையும் கொழுப்பும் செரிமான மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
குளிர்ந்த உணவு செரிமான நொதிகளின் செயல்பாட்டைக் குறைத்து, ஜீரண மண்டலத்தை பாதிக்கிறது. இதனால், செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு வாயு பிரச்சனைகள், அஜீரணம், வயிறு உப்புசம் ஆகிய எச்சரிக்கைகளை தருகின்றன.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு அதிகளவில் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். அடிக்கடி உணவுப் பாதையில் குளிச்சியான ஐஸ்கிரீம் செல்லும் போது நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதித்து அடிக்கடி காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், நோய் தொற்று ஆகியவற்றை ஏற்படுத்தும். சிறிய வயது மற்றும் முதியவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாகும்.
இரவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது இன்னும் அபாயத்தை அதிகரிக்கிறது. சர்க்கரை உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து தூக்கம் வராமல் செய்து விடும். அது போல் வெறும் வயிற்றிலும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடனடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்து விடும். மிக முக்கியமாக ஐஸ்கிரீம் பற்களை அதிகமாக பாதிக்கிறது. அதன் குளிர்ச்சி உணர்வு பல் கூச்சத்தை ஏற்படுத்த தொடங்கி, பின்னர் பல்லை பலவீனமாக்கி சொத்தையாக்குகிறது.
ஐஸ்கிரீம் மீது ஆசை உள்ளவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 50 கிராம் அளவில் சாப்பிடலாம். மற்றபடி வீட்டில் ஐஸ்கிரீம் தயாரித்தாலும் அது ஆரோக்கியமற்ற கொழுப்பாகத் தான் பார்க்கப்படுகிறது.