

இன்றைய நவீன வேகமான உலகத்தில், வெற்றிக்குப் பின்னால் ஓடும் நம் வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒரு சொல்லாக மாறிவிட்டது 'பர்ன்அவுட்' (Burnout). காலை விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை வேலை, குடும்பம், பொறுப்புகள் என எந்திரமாக இயங்கி, ஒரு கட்டத்தில் உடல் மற்றும் மனம் இரண்டும் முழுமையாகச் சோர்ந்துபோகும் நிலையே பர்ன்அவுட் எனப்படுகிறது. இது சாதாரண சோர்வு அல்ல. நம் உத்வேகத்தையே உறிஞ்சிவிடும் ஒரு தீவிரமான மனநிலை தளர்வு.இதை எதிர்கொள்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
பர்ன்அவுட் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் யாவை?
அதிகப்படியான வேலைப் பளு மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தம் காரணமாக ஏற்படும் கடுமையான சோர்வு நிலையைத் தாண்டி, வாழ்க்கையின் மீது ஒருவித வெறுமையும் விரக்தியும் ஏற்படுவதை இது குறிக்கிறது. இதன் முக்கிய அறிகுறிகள்:
1.எவ்வளவு நேரம் தூங்கினாலும் உடல் சோர்வு நீங்காமல் இருப்பது.
2. முன்பு பிடித்தமான விஷயங்கள் அல்லது வேலைகளில் கூட துளியும் ஈடுபாடு இல்லாமல் போவது.
3. சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட எளிதில் எரிச்சல் மற்றும் கோபப்படுவது அல்லது டென்ஷன் ஆவது.
4. எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியாமல், ஞாபக மறதி மற்றும் கவனச் சிதறல் ஏற்படுவது.
பர்ன் அவுட்டிற்கான காரணங்கள்:
பெரும்பாலானோர் தாங்கள் செய்யும் வேலை மீது அதிகப்படியான பற்று கொண்டவர்களாகவோ அல்லது எல்லாவற்றையும் நூறு சதவீதம் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திலோ இருப்பவர்கள்தான் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை, நேரம் கடந்த வேலை, குடும்பப் பொறுப்புகளைத் தனியாகச் சுமப்பது, பாராட்டு கிடைக்காத ஏமாற்றம் மற்றும் ஓய்வுக்கான நேரம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்கள் நம்மை அறியாமலேயே மனதைச் சோர்வடையச் செய்கின்றன.
இந்த மனச் சோர்விலிருந்து மீள்வது எப்படி?
பர்ன் அவுட் நிலையில் இருந்து மீண்டு வருவது என்பது சாத்தியமே. அதற்கு சில எளிய மற்றும் அவசியமான வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்:
'இல்லை' என்று சொல்லப் பழக வேண்டும்: உங்கள் திறமைக்கும் எல்லைக்கும் மீறி எதையும் ஏற்க வேண்டாம். உங்களால் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்ற சமயங்களில் கறாராக முடியாது என சொல்லப் பழகுங்கள். இது மன அழுத்தத்தை பாதியாகக் குறைக்கும்.
டிஜிட்டல் இடைவெளி: அலுவலக நேரம் முடிந்ததும் உங்களது ஃபோன் மற்றும் மடிக்கணினியைத் தூக்கி தூரவைத்து விடுங்கள். சமூக வலைத்தளங்களின் தொடர்ச்சியான பயன்பாடு மூளைக்கு ஓய்வு தருவதில்லை. எனவே, தினமும் ஒரு சில மணி நேரம் மின்னணு சாதனங்களிலிருந்து முழுமையாக விலகியிருங்கள்.
தனிப்பட்ட நேரத்திற்கு முதலிடம்: பிடித்த பொழுதுபோக்குகளான புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, தோட்டக்கலை அல்லது பிடித்தமான இடங்களுக்குச் செல்வது போன்றவற்றுக்காகத் தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.
உடற்பயிற்சி/ தூக்கம்: சீரான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் புதிய ஆற்றலைத் தரும். யோகா மற்றும் தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்தவும் அமைதிப்படுத்தவும் பெரிதும் உதவும்.
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்: உங்கள் மனச்சுமையை உங்களிடமே வைத்துக் கொள்ளாமல், நம்பிக்கையான நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். சில சமயங்களில் மனம் விட்டுப் பேசுவதே பாதிச் சுமையைக் குறைத்துவிடும்.
வாழ்க்கை என்பது ஓடிக்கொண்டே இருப்பதற்கான பந்தயம் அல்ல, அது ரசித்து வாழ்வதற்கானது. உடல் மற்றும் மனம் உங்களுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை தான் இந்த பர்ன்அவுட். எனவே, ஓட்டத்தை சற்று நிறுத்திவிட்டு, உங்களுக்காகச் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். உங்களை நீங்கள் நேசிக்கத் தொடங்கும்போது, சோர்வு விலகி புதிய புத்துணர்ச்சி பிறக்கும்.