பாட்டி சொன்ன அந்த ரகசியம்! குளிர்காலத்தில் மூச்சு விட சிரமப்படுபவர்கள் இதைப் படித்தே ஆகவேண்டும்!

A girl with a respiratory problem and Winter season
Winter season respiratory problems curing tips
Published on

குளிர்காலத்தில் பலருக்கும் சுவாச நோய் தொற்றுகள்தான் ஏராளமாக ஏற்படும். இதற்கு மிகவும் நம்பகத்தன்மையானது மஞ்சள். இது சளி, இருமல், மூச்சு குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக அமைகிறது. ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். கூடுதல் நன்மைகளுக்காக இந்தக் கலவையில் இஞ்சி மற்றும் மிளகுத்தூளையும் சேர்க்கலாம்.

தேன் ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். எனவே, இது சுவாச நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தேனில் உள்ள பலன்களைப் பெற ஒரு கப் வெதுவெதுப்பான நீர் அல்லது தேநீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்த வேண்டும்.

ஆவி பிடிப்பது என்பது சுவாச நோய் தொற்றுகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். ஏனெனில், இது சளியை வெளியேற்றவும் மற்றும் நாசியில் உள்ள கிருமிகளை அகற்றவும் உதவுகிறது. வீட்டிலேயே நீராவி உள்ளிழுக்க ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு துண்டு அல்லது போர்வையை போர்த்திக் கொண்டு நீராவியை உள்ளே இழுக்க வேண்டும். பத்து நிமிடங்களுக்கு உங்கள் வாய் வழியாக சுவாசிக்க வேண்டும்.

குளிர் காலத்தில்(Winter season) உடல் நீர் ஏற்றமாக இருப்பது முக்கியம். இதற்கு நாள் முழுவதும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அதேபோல், மூலிகை தேநீர் அல்லது பழச்சாறுகள் போன்ற பிற திரவங்களையும் அருந்தலாம்.

ஐஸ்கிரீம் அல்லது குளிர்பானங்கள் போன்ற குளிர்ந்த உணவுகளை கண்ணால் கூட காணாதீர்கள். இதனால் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஏராளமாக உற்பத்தியாகி உங்களை குளிர்காலத்தில் கடும் தொல்லைக்கு உள்ளாக்கி விடும். குளிர்காலத்தில் குளிர்ந்த உணவுகளைத் தவிர்த்து, சூடான சூப்புகள் சூடான மூலிகை டீக்களை குடிப்பது நல்லது.

டீ தூள், புதினா, துளசி இலைகள், உடைத்த மிளகு, இஞ்சி, ரோஜா இதழ் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தனியாகவோ இல்லை பால் சேர்த்தோ அருந்தலாம். இந்த மூலிகை டீ புத்துணர்ச்சி தருவதுடன் சளி, தொண்டை கரகரப்புக்கு நல்ல மருந்தாக அமையும்.

வைரஸ் பரவலைத் தடுக்க வெந்நீரில் கல் உப்பு போட்டு ஒரு நாளைக்கு இரண்டு தடவை நன்றாக வாய் கொப்பளித்தல் உரிய தடுப்பு முறையாகும்.

காலையில் இஞ்சி டீ, மதியத்தில் சுக்கு பால், இரவு நேரங்களில் சூடான பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து பருகுவது நல்லது. இரவு உணவை ஏழு மணிக்கு முன்பாக சூடாக சாப்பிட வேண்டும். வெளியில் சென்று விட்டு வந்தவுடன் வெந்நீரில் மஞ்சள் பொடி சேர்த்து கை, கால்களை கழுவ வேண்டும்.

குளிர்காலத்தில் நம்மை எளிதில் நோய் தாக்கி விடும். அச்சமயங்களில் சருமத்தில் கடும் வறட்சி ஏற்படும். இதைத் தவிர்க்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதேபோல், குளிர்காலத்தில் பூஞ்சை தாக்குதலும் அதிகமாகக் காணப்படும். எனவே, குறைந்தபட்சம் வெதுவெதுப்பான நீராவது குளிக்கப் பயன்படுத்தலாம்.

தோல் நீக்கிய இஞ்சி துண்டு, லவங்கம், துளசி இலை கற்பூரவல்லி இலை, மிளகு, ஏலக்காய், இடித்த பூண்டு பெருஞ்சீரகம், ஓமம், சீரகம் இவற்றை தண்ணீரில் பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். இந்த வகை டீ நுரையீரல் செயல்பாட்டை சீராக்க உதவுவதோடு, குளிர்காலத்தில் சுவாசக் கோளாறுகளையும் சரியாக்கும்.

இதையும் படியுங்கள்:
என்னது! பெட்ல உருளைக்கிழங்கா? 5 நிமிசத்தில் அசந்து தூங்க வைக்கும் 'Potato Bed' ஹேக்!
A girl with a respiratory problem and Winter season

ஓமம், மஞ்சள் தூள், மூன்று துளி நீலகிரி தைலத்தை சேர்த்து ஐந்து நிமிடம் நீராவி பிடித்தால் மார்பு, நாசிப் பகுதிகள் விரிவடைந்து சளி வெளியேறிவிடும். இதனால் சளி தொந்தரவிலிருந்து சுலபமாக நிவாரணம் கிடைக்கும்.

-ஆர்.ஜெயலட்சுமி

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com