
தினமும் நாம் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களில் பல் துலக்குவது அடிப்படையான ஒன்றாக உள்ளது. ஆனால், இன்றைய நவீன காலகட்டத்தில் காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் 'Bed Coffee' என்ற பெயரில் காஃபி மற்றும் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இது நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், பல் துலக்காமல் எந்தவொரு உணவுப் பொருளையும் சாப்பிடக்கூடாது, எதையும் குடிக்கக்கூடாது என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இந்நிலையில், காலை எழுந்ததும் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல், காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதும் உடல்நலனுக்கு பல்வேறு நன்மைகளைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.
பல் துலக்காமல் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
உடலில் உள்ள பலவகையான நோய்களைத் தீர்க்க உதவுகிறது.
உடல் பருமன், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் தினமும் வெது வெதுப்பான நீரை அருந்துவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல் சொத்தையைத் தடுக்க உதவுகிறது.
உடலின் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. பருவகால நோய்களான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
பளபளப்பான சருமம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதோடு முடியை பளபளப்பாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
சிறுநீரகத்தை சுத்தப்படுத்தவும் அதன் திறனை மேம்படுத்தவும் முடிகிறது. சீறுநீரக கற்களையும் கரைக்க உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உடலில் உள்ள நச்சுக்கள் நீங்குவதோடு, வாயில் கறை மற்றும் அழுக்குப் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் பெருகுவதைத் தடுக்கிறது. இதனால், வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. மேலும், வாயின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிக்கும்போது, அதிக சூடான தண்ணீரையும் மற்றும் அளவுக்கு அதிகமான தண்ணீரையும் குடிக்காமல் இருப்பது நல்லது.
அதே சமயம், பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்றுவிடும். அதன் காரணமாக, உடலில் ஏதாவது பிரச்னை ஏற்படக் கூடுமா? என்ற சந்தேகம் எழலாம். ஆனால், இந்த பாக்டீரியங்கள் நமக்கு நன்மையே செய்கின்றன. இது நமது செரிமானம் சீராக நடைபெறுவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் அஜீரணக் கோளாறுகளை குறைப்பதற்கும் உதவுகிறது என்று கூறுகின்றனர்.